#ELECTIONBREAKING: பிப்.19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – மாநில தேர்தல் ஆணையர் அறிவிப்பு!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்.19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவிப்பு.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள், 8288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறவுள்ளன. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ழக்கை விசாரித்த நீதிமன்றம் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தடையில்லை என்றும், கொரோனாவை காரணம் காட்டி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க கூடாது என்ற அரசின் நிலைப்பாடு பாராட்டுக்குரியது என்று தெரிவித்தனர். இதன்பின்னர், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விதிமுறைகள் மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுயிருந்தது. மேலும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அட்டவணை தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதியை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சென்னை அரும்பாக்கம் அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார், தமிழகத்தில் மொத்தம் உள்ள 12,838 பதவிகளுக்கு ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடத்தப்படும் என்றும் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார்.

வேட்பு மனுத்தாக்கல் வரும் 28 தேதியும், வேட்பு மனுத் தாக்கல் கடைசி நாள் பிப்ரவரி 04-ஆம் தேதியும், வேட்பு மனு பரிசீலனை பிப்ரவரி 5 -ஆம் தேதியும், வேட்பு மனு திரும்பப் பெறும் கடைசி நாள் 7-ஆம் தேதியும் நடைபெறும் என தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சியில் மட்டும் 5794 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்த ஆணையர், மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தல் மார்ச் 4-ஆம் தேதி நடைபெற உள்ளது என்றும் அறிவித்தார்.

தமிழகத்தில், பிப்ரவரி 19-ஆம் தேதி 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும். இதுபோன்று 21 மாநகராட்சிகளில் உள்ள 1,064 வார்டுகள், 138 நகராட்சிகளில் உள்ள 3,468 வார்டுகள், 490 பேரூராட்சிகளில் உள்ள 8,288 வார்டுகளுக்கும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்