உப்பு தின்னால் தண்ணீர் குடிக்கணும். இல்லை என்றால் விக்கும் என எச்.ராஜா பேட்டி.
சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட 9 இடங்களில் நேற்று காலை 7 முதல் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான வீடு, அலுவலகம் மற்றும் கல்லுரிகளில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. செம்மண் குவாரி தொடர்பாக 2012ம் ஆண்டில் பதியப்பட்ட வழக்கில் 11 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சோதனை நடைபெற்றுள்ளது.
இந்த சோதனையில், அமைச்சர் பொன்முடி வீட்டில் இருந்து கணக்கில் வராத பணம் ரூ.70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், ரூ.10 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க மற்றும் பிரிட்டன் நாட்டு கரன்சிகளும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில், 13 மணிநேர சோதனைக்கு பின், தற்போது நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு, அமைச்சர் பொன்முடியை அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரது சொந்த காரிலேயே விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
அமலாக்கத்துறையின் இந்த சோதனை குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எச்.ராஜா அவர்கள், உப்பு தின்னால் தண்ணீர் குடிக்கணும். இல்லை என்றால் விக்கும். அதுனால சொன்னேன். செந்தில் பாலாஜி , திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சிறையில் இருப்பார் என சொன்ன முதல்வர் ஸ்டாலின் சபதத்தை அமலாக்கத்துறை நிறைவேற்றி வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே போடப்பட்ட வழக்கில், அமைச்சர் பொன்முடி மற்றும் கே.என்.நேரு ஆகிய இரண்டு பேருக்கும் அமலாக்கத்துறை ரெய்டு வரும் என சொன்னேன். இப்போ அனிதா ராதா கிருஷ்ணனை சேர்த்து கொள்ளுங்கள். அதுனால தான் நேற்று, டுவீட்ல கேட்டிருந்தேன். அடுத்து திருச்சியா? தூத்துக்குடியா? என கேட்டிருந்தேன்.
இது பழிவாங்கும் செயல் அல்ல. பா.ஜ.,வுக்கு இந்த வழக்கிற்கு எந்த தொடர்பும் இல்லை. அமலாக்கத்துறையின் ஆடி ஸ்பெஷல் ஆபர் பொன்முடி. அதன் சலுகை இன்னும் தொடரும் என விமர்சித்துள்ளார்.