தமிழகத்தில் தொடர்ந்து 25 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு – முழு விவரம் உள்ளே!!

முழு ஊரடங்கின் எதிரொலியாக தற்போது தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து 25 ஆயிரத்துக்கு கீழ் குறைந்து வருகிறது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை லட்சக்கணக்கான உயிர்களை பறித்துள்ளதுடன், தினமும் பலர் புதிதாக பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். தமிழகத்திலும் இதுவரை 21,72,751 பேர்  பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25,665 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே, கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இதன் விளைவாக தமிழகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்த வண்ணம் உள்ளது.

தளர்வுகளற்ற முழு ஊரடங்கு

கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் கடந்த மே 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையிலும் சிறிய தளர்வுகளுடனான ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது. இருப்பினும் கொரோனாவின் தீவிரம் குறையாத நிலையில், இந்த ஊரடங்கின் தொடர்ச்சியாக மே 24 முதல் 31 ஆம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த முழு ஊரடங்கின் எதிரொலியாக தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியதால், மே 31 ஆம் தேதியிலிருந்து ஜூன் 7 ஆம் தேதி வரையில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

குறையும் கொரோனா பாதிப்பு

கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசால் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கின் எதிரொலியாக தினசரி கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது. ஊரடங்கிற்கு முன்பதாக தமிழகத்தில் தினமும் 35 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு தினசரி கொரோனா தொற்று பதிவு செய்யப்பட்டு வந்தது.

ஆனால், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள இந்த இரண்டு வார காலகட்டத்தில் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் தினசரி எண்ணிக்கை 25 ஆயிரத்திற்கும் கீழ் குறைய தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில் 24,405 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 460 பேர் உயிரிழந்துள்ளனர்.

தடுப்பூசிகள்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைய துவங்கியுள்ள நிலையில், கொரோனாவுக்கு தடுப்பூசி போடுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுவரை தமிழகத்திற்கு 1 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி டோஸ்கள் அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதில், 93.3 லட்சம் டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், 7.24 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மீதமிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், வருகிற ஜூன் 15 முதல் 30 வரை தமிழகத்திற்கு கூடுதலாக 18.36 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்படும் எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு

தளர்வுகளற்ற முழு ஊரடங்கு தமிழகத்தில் அமலில் உள்ள நிலையில், வருகிற ஜூன் 7 ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ளதால், இது குறித்து தற்பொழுது தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார்.

author avatar
Rebekal