தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை முழுமையாக நீக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை முழுமையாக நீக்க வேண்டும் என்று  மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில், மக்கள் மாவட்டம் விட்டு வேறு மாவட்டம் செல்ல வேண்டும் என்றால், கண்டிப்பாக இ-பாஸ் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் முக்கிய காரணங்களுக்கு வெளி மாவட்டங்களுக்கு செல்ல சிலர் விண்ணப்பித்தும் சில காரணங்களால் அது நிராகரிப்படுவதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனிடையே இன்று முதலமைச்சர் பழனிசாமி விண்ணப்பித்த அனைவருக்கும் இ- பாஸ் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,எளிய மக்கள்  இ பாஸ்-க்கு விண்ணப்பிக்கவே சிரமப்படுகிறார்கள் என்பதால் இ-பாஸ் முறையை முற்றிலும் நீக்கவே வலியுறுத்தினேன். இப்போதும் முழுமையாக நீக்கவே வலியுறுத்துகிறேன். அதேநேரத்தில், இத்தளர்வை அவசியமான பயணங்களுக்கு மட்டும் பயன்படுத்தி பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்!