எம்.எல்.ஏ-க்களுக்கு பிரியாணி, பரிசு பொருட்கள் வழங்க வேண்டாம்..! – மு.க.ஸ்டாலின்

எம்.எல்.ஏ-க்களுக்கு பிரியாணி, பரிசு பொருட்கள் வழங்க வேண்டாம்.  

சட்டப்பேரவை கூட்டம் செப்டம்பர் மாதம் 21-ம் தேதி வரை மொத்தம் 29 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், இன்று பட்ஜெட் கூட்டத் தொடரில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது அந்தந்த துறைகளிலிருந்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பரிசு பொருட்களை வழங்குவது, வெளியில் இருந்து வரவழைக்கப்பட்டு உயர்தர பிரியாணி உள்ளிட்ட உணவுகளை வழங்குவது போன்றவை நடைமுறையில் இருந்தது.

மேலும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உயர்ரக சூட்கேஸ்கள், கடிகாரங்கள், ஆவின் பொருட்கள் பரிசுகளாக வழங்கப்பட்டு வந்தது. அந்த வகையில், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயலக அதிகாரிகள், காவல்துறையினர் என ஒரு நாளைக்கு சுமார் 1,000 பேருக்கு உணவு வழங்குவதற்காக அந்தந்த அரசுத் துறையில் இருந்து சுமார் 3 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இவ்வாறு செலவு செய்வதற்கு அரசு துறைகளின் பட்ஜெட்டில் எந்த அனுமதியும் கிடையாது. எனவே, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல் முறையாக சிக்கனத்தை கடைபிடிக்கும் வண்ணமாக, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, பிரியாணி, பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவைகளை வழங்கும் நடைமுறையை கைவிடுமாறு அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு மாறாக, எம்எல்ஏக்கள் தங்கள் உணவை சொந்த செலவில் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் அல்லது சட்டசபைக் கேண்டீனில் உண்ண வேண்டும் என்று  அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.