#Elections2021: அதிமுக அமைச்சருக்கு நன்றி கூறிய திமுக எம்.பி. கனிமொழி!

திமுக எம்.பி. கனிமொழி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதற்கு கனிமொழி, நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், நேற்று மாலை 7 மணி முதல் தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைந்தது. இதற்கிடையில், தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், பிரச்சாரத்தில் ஈடுபடும் வேட்பாளர்கள் உட்பட பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிரம் பிரச்சாரம் மேற்கொண்டு வந்த திமுக எம்.பி.யும், மகளிரணி செயலாளருமான கனிமொழிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கனிமொழியின் உடல்நிலை குறித்து பலரும் விசாரித்து வரும் நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தொற்றிலிருந்து விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் என தெரிவித்தார். இதற்கு பதிலாக கனிமொழி, உங்களின் அக்கறை மற்றும் வாழ்த்துக்களுக்கு நன்றி என பதிலுக்கு தெரிவித்துள்ளார்.