இன்று மாலை தொடங்கும் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்;சட்டமன்ற தலைவராகும் மு.க.ஸ்டாலின்..!

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.இந்தக் கூட்டத்தில் முறைப்படி சட்டமன்ற தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட உள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதியன்று நடைபெற்றது.இதற்கான வாக்குஎண்ணும் பணியானது மே 2 ஆம் தேதி நடந்தது.இதில்,திமுக தலைமையிலான கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது.எனவே,திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பதவி ஏற்பது உறுதியானது.

இதுகுறித்து,நேற்று காலை ஊடகங்களுக்கு பேட்டியளித்த திமுக தலைவர் ஸ்டாலின்,”மே 7 ஆம் தேதி நடைபெறவுள்ள முதல்வர் பதவி ஏற்பு விழாவானது ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் நடைபெறும்” எனக் கூறினார்.

ஆனால் இந்தப் பதவியேற்புக்கு முன்னர்,கூட்டம் கூட்டி திமுக சார்பில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை ஸ்டாலின் பெற வேண்டும்.

அதன்படி திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில்,இன்று மாலை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் திமுக தலைமைச் செயலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ளது.இதில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்துக் கொள்வர்.மேலும்,இந்தக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரின் ஆதரவையும் பெற்று சட்டமன்றத் தலைவராக ஸ்டாலின் முறைப்படி தேர்வு செய்யப்படுவார்.

அதன்பின்னர் ஸ்டாலின்,ஆதரவு பெற்ற உறுப்பினர்களின் கடிதங்களுடன் ஆளுநரைச் சந்தித்து முதல்வர் பதவிக்கான உரிமையைப் பெறுவார்.