சாலை விபத்தில் சிக்கிய இளைஞர்..!வேஷ்டியை கிழித்து முதலுதவி செய்த திமுக எம்.எல்.ஏ..!

சாலை விபத்தில் கால் முறிவுற்ற நிலையில் வலியால் துடித்த இளைஞருக்கு தனது வேஷ்டியை கிழித்து திமுக எம்.எல்.ஏ. ஆன மருத்துவர் முதலுதவி செய்துள்ளார்.

பனங்குப்பம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஜெயக்குமார். இவர் விழுப்புரம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த பொழுது ராகவன்பேட்டை எனும் இடத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கிய இளைஞருக்கு கால் முறிவுற்று வலியால் துடித்துள்ளார்.

அப்போது அவ்வழியாக சென்றுகொண்டிருந்த விழுப்புரம் திமுக எம்.எல்.ஏ டாக்டர் லட்சுமணன் வலியால் துடித்த இளைஞரை கண்டுள்ளார். உடனே அந்த இளைஞருக்கு ஆறுதல் கூறி முதலுதவி அளித்துள்ளார். அப்போது காயத்திற்கு கட்டு போடுவதற்கு துணி ஏதும் இல்லாததால், மாற்று துணியாக தனது காரில் வைத்திருந்த வேஷ்டியை கிழித்து அந்த இளைஞருக்கு கட்டு போட்டுள்ளார்.

இதன் பின்னர், அவ்விடத்திற்கு ஆம்புலன்ஸ் வரவைத்து அருகில் உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.  அதன் பின்னரே அங்கிருந்து மருத்துவரான எம்.எல்.ஏ. லட்சுமணன் புறப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிறந்த எலும்பு முறிவு மருத்துவர்களில் திமுக எம்.எல்.ஏ. லட்சுமணனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.