நெருங்கும் சட்டமன்ற தேர்தல் ! வருகின்ற 17-ஆம் தேதி விருப்பமனு விநியோகம் – திமுக

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வருகின்ற 17-ஆம் தேதி முதல் விருப்ப மனுக்கள் வழங்க திமுக தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது.தற்போதைய தமிழக சட்டப்பேரவையின் காலம் வருகின்ற மே 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கூடுதலாக 25000 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.மேலும் கொரோனா காரணமாக தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேர்தலுக்கு தயாராகும் விதமாக அனைத்து கட்சிகளும் பிரச்சாரங்களை தொடங்கிவிட்டன.மேலும் அதிமுக,மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் சட்டமன்ற பொதுத்தேர்தல்களில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்பமனு அளிப்பதற்கான தேதியை அறிவித்துள்ளன.

இந்நிலையில் 2021-தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத்தேர்தலில்,திமுக வேட்பாளராகப் போட்டியிட விரும்புவோர் 17-02-2021 முதல் 24-02-2021 வரை தலைமைக் கழகத்தில் விண்ணப்பம் செய்யலாம்” என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில சட்டப்பேரவை தொகுதிக்கான விண்ணப்பக்கட்டணம் :

பொதுத் தொகுதி : ரூ.25,000

மகளீருக்கும் மற்றும் தனித் தொகுதிக்கும் : ரூ.15,000  என்று  கட்டணத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.