“திமுக அரசின் அறிவிப்பு…கரும்பு விவசாயிகளை வஞ்சிக்கும் செயல்” – ஓபிஎஸ் கடும் கண்டனம்!

தமிழகத்தில் கரும்புக்கு டன்னுக்கு 2,900 ரூபாய் வழங்கப்படும் என்று திமுக அரசு அறிவித்துள்ளது கரும்பு விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என்றும்,இந்த அறிவிப்பது கரும்பு விவசாயிகளை வஞ்சிக்கும் செயல் என்றும் ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தால் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4000 வழங்கப்படும் என்று 8 மாதங்களுக்கு முன்பு தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு,ஆட்சிக்கு வந்தபின் ரூ.2900 என்ற அறிவிப்பது கரும்பு விவசாயிகளை வஞ்சிக்கும் செயல்! திமுகவிற்கு தனது கடும் கண்டனங்கள் என்றும்,முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு,குறைந்தபட்சம் தேர்தல் வாக்குறுதியான கரும்புக்கு ஆதார விலையாக டன் ஒன்றுக்கு 4,000 ரூபாய் வழங்கப்படும் என்பதையாவது நிறைவேற்ற வழிவகை செய்ய வேண்டும் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக,தனது அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

“தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைப் பொதுத் தேர்தலை முன்னிட்டு தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் “கரும்புக்கு ஆதார விலை டன் ஒன்றுக்கு 4,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்” என்று தலைப்புச் செய்தியாக கொடுக்கப்பட்டது.ஆனால் மூன்று நாட்களுக்கு முன்பு தி.மு.க. அரசினால் வெளியிடப்பட்ட செய்தி வெளியீட்டில் கரும்புக்கு டன்னுக்கு 2,900 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது கரும்பு விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கரும்புக்கான நியாயமான மற்றும் ஆதாய விலையை ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு நிர்ணயித்து வருகிறது.இந்த வகையில்,நான் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் 2016-2017 ஆம் ஆண்டு கரும்பு பருவத்திற்கு நியாயமான மற்றும் ஆதாய விலையாக டன் ஒன்றுக்கு 2,300 ரூபாய் என மத்திய அரசால் நிர்ணயம் செய்யப்பட்டது.அதே சமயத்தில் அண்டை மாநிலமான கர்நாடகத்தில் பெரும்பாலான சர்க்கரை ஆலைகள் டன்
ஒன்றுக்கு 2,600 ரூபாய் வழங்கியதையும், மகாராஷ்டிராவில் 2,475 ரூபாய் வழங்கியதையும் கருத்தில் கொண்டு,தமிழ்நாட்டிலுள்ள கரும்பு விவசாயிகளின் நலனைக் காக்கும் வகையில்,மத்திய அரசின் நியாயமான மற்றும் ஆதாய விலையான கரும்புக்கு டன் ஒன்றுக்கு 2,300 ரூபாய் என்ற விலையுடன் மாநில அரசின் பரிந்துரை விலையாக போக்குவரத்துச் செலவு 100 ரூபாய் உட்பட 550 ரூபாய் சேர்க்கப்பட்டு,ஒரு டன் கரும்பின் விலை 2,850 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது.இது 27-12-2016 நாளிட்ட செய்திக் குறிப்பின் மூலம் அறிவிக்கப்பட்டது.

அந்த சமயத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் விவசாயிகள் கரும்புக்கு டன் ஒன்றுக்கு 3,500 ரூபாய் கேட்கிறார்கள் எனச் சுட்டிக்காட்டி, விவசாயிகளின் கோரிக்கை ஏற்கப்படவில்லை என்றால்,அதனை எதிர்த்து தி.மு.க. போராட்டம் நடத்தும் என்றும் அறிவித்ததையும்,தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கரும்புக்கு டன் ஒன்றுக்கு 4,000 ரூபாய் வழங்கப்படும் என்ற வாக்குறுதி கொடுக்கப்பட்டதையும் இந்தத் தருணத்தில் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஆனால்,தற்போது விவசாயிகள் கரும்புக்கு டன் ஒன்றுக்கு 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று கூறி வரும் நிலையில்,2020-21 ஆம் ஆண்டு அரவைப் பருவத்திற்கு மத்திய அரசு நிர்ணயித்த விலையான கரும்புக்கு டன் ஒன்றுக்கு 2,707 ரூபாய் 50 காசு என்பதுடன் உற்பத்தி ஊக்கத் தொகையாக 42 ரூபாய் 50 காசு மற்றும் சிறப்பு ஊக்கத் தொகையாக 150 ரூபாய் என மொத்தம் 192 ரூபாய் 50 காசு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் என்றும், இதன்மூலம் கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு 2,900 ரூபாய் கிடைக்கும் என்று தமிழ்நாடு அரசு 08-01-2022 நாளிட்ட செய்தி வெளியீட்டின் மூலம் அறிவித்துள்ளது.ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கரும்புக்கு டன் ஒன்றுக்கு 3,500 ரூபாய் அளிக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தவர்,தி.மு.க.
ஆட்சிக்கு வந்தால் கரும்புக்கு டன் ஒன்றுக்கு 4,000 ரூபாய் வழங்கப்படும் என்று எட்டு மாதங்களுக்கு முன்பு தேர்தல் அறிக்கைமூலம் வாக்குறுதி அளித்தவர்,இப்போது ஆட்சிக்கு வந்தபிறகு 2,900 ரூபாய் என்று அறிவிப்பது என்பது கரும்பு விவசாயிகளை வஞ்சிக்கும் செயல் ஆகும்.’சொல்வது ஒன்று, செய்வது ஒன்று’ என்ற அளவில் தி.மு.க.வின் செயல்பாடு இருக்கிறது. இதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது சொன்னதையும், முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு செய்வதையும் ஒப்பிட்டு, அதனை அரசுக்குச் சுட்டிக்காட்டி நினைவுபடுத்துவதும், அதனை நிறைவேற்ற வலியுறுத்துவதும் எதிர்க்கட்சியின் கடமை என்ற அடிப்படையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு இதைக் கொண்டு வருகிறேன்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, குறைந்தபட்சம் தேர்தல் வாக்குறுதியான கரும்புக்கு ஆதார விலையாக டன் ஒன்றுக்கு 4,000 ரூபாய் வழங்கப்படும் என்பதையாவது நிறைவேற்ற வழிவகை செய்ய வேண்டும் என்று கரும்பு விவசாயிகள் சார்பாகவும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.