வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு – திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து  திமுக கூட்டணி கட்சிகள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றம் செய்யப்பட்டது.  இந்த மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 அண்மையில்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக்கட்சி கூட்டம்  நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில்  வருகின்ற 28ஆம் தேதி (இன்று ) திமுக மற்றும் தோழமை கட்சிகள் போராட்டம்  நடத்தப்படும்  என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக கூட்டணி கட்சிகள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளன. சென்னை வடக்கில்  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, சென்னை தெற்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கடலூரில்  விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.