திமுக அராஜக கட்சி., நோபல் பரிசு தந்தால், ஸ்டாலின் தகுதி பெறுவார் – முதல்வர்

திமுகவில் கருணாநிதி, முக ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் என வாரிசு அரசியல் செய்கிறார்கள் என்று முதல்வர் பழனிசாமி குற்றசாட்டியுள்ளார்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற தலைப்பில் தேர்தல் பரப்புரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு வருகிறார். அப்போது பேசிய முதல்வர், நிறைவேற்ற முடியாத திட்டங்களை அறிவித்தது திமுக. மக்களவை தேர்தலில் வென்று திமுக செய்ததென்ன?. பொய் வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றிவிட்டது திமுக. பொய் பேசுவதற்கு நோபல் பரிசு தந்தால், ஸ்டாலின் தகுதி பெறுவார். பதவிக்கு வரவேண்டும் என்றால் எவ்வளவு பொய் பேச வேண்டுமோ அவ்வளவு பேசுவார் ஸ்டாலின்.

ஆட்சியில் இல்லாதபோதே திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டனர். திமுக அராஜக கட்சி, அது ஆட்சிக்கு வர துடிக்கிறது. கடைகள், உணவகங்களில் திமுகவினர் அராஜகம், அடிதடியில் ஈடுபடுகின்றனர். தமிழகத்திற்கு நிதி பெற்று தர திமுக எம்பிக்கள் ஏதும் நடவடிக்கை எடுத்தார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார். அடுத்து வாரிசு அரசியல் செய்கிறார்கள் திமுக. திமுகவில் கருணாநிதி, முக ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் என வாரிசு அரசியல் செய்கிறார்கள். அனைத்து பதவிகளுக்கும் வாரிசுகள் மட்டுமே வர வேண்டும் என திமுக அரசியல் செய்கிறது.

திமுகவில் பழம்பெரும் தலைவர்கள் யாரும் பரப்புரை செய்ய அனுமதிக்கப்படாதது ஏன்? என்றும் கனிமொழி, கே.என் நேரு போன்றோரை பரப்புரைக்கு அனுப்பாமல் உதயநிதியை அனுப்பியது ஏன்? என முதல்வர் பரப்புரையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்