20 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர் கால் தடம் ராஜஸ்தானில் கண்டுபிடிப்பு..!

20 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் காலடி தடம் ராஜஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர் விலங்குகள் பூமியில் வாழ்ந்துள்ளது. இவைகள் இயற்கை பேரழிவு காரணமாக அழிந்துபோய்விட்டன. இவற்றின் காலடி தடங்கள் பல இடங்களில் கிடைத்துள்ளது. சில இடங்களில் டைனோசர்களின் எலும்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தார் பாலைவனத்தில் டைனோசர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள ஜெய்சால்மர் மாவட்டத்தில் மூன்று வகையான டைனோசர்களின் காலடி தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவைகள் 20 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த டைனோசர்களின் காலடி தடங்கள் 35 சென்டி மீட்டரிலும், 5.5 சென்டி மீட்டரிலும் கிடைத்துள்ளது. இந்த டைனோசர்கள் 500 முதல் 700 கிலோ எடை உடையது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.