21 ஆம் நூற்றாண்டில் பிறந்து இந்திய அணிக்காக விளையாடிய முதல் கிரிக்கெட் வீரர் படிக்கல்..!

தேவ்தத் படிக்கல் 21 ஆம் நூற்றாண்டில் பிறந்து இந்தியாவுக்காக சர்வதேச ஆண்கள் கிரிக்கெட்டில் விளையாடிய முதல் இந்திய கிரிக்கெட் வீரர் ஆவார்.

இந்தியா, இலங்கை இடையிலான 2-வது டி20 போட்டி நேற்று முன்தினம் நடைபெற இருந்த நிலையில் கிருனல் பாண்டியாவிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் போட்டி நேற்று ஒத்திவைக்கப்பட்டது.

மேலும்,கிருனால் பாண்டியாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 8 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில்,புதிதாக ருதுராஜ் கெய்க்வாட்,படிக்கல், சேதன் சாகரியா, நிதீஷ் ராணா ஆகிய புதுமுக வீரர்களுடன் இந்திய அணி களமிறங்கியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச முடிவு செய்தனர். அதன்படி,பேட்டிங் செய்த  இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.இதனையடுத்து,இலக்கை நோக்கி இறங்கிய இலங்கை அணி 19.4 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 133 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

முதல் வீரர்:

இப்போட்டியில்,படிக்கல் 23 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார்.மேலும்,அவர் முதன் முதலில் சர்வதேச போட்டியில் விளையாடியுள்ளார்.இதனால்,21 ஆம் நூற்றாண்டில் பிறந்து இந்தியாவுக்காக சர்வதேச ஆண்கள் கிரிக்கெட்டில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை தேவதத் படிக்கல் பெற்றுள்ளார்.ஏனெனில்,படிக்கல் இதுவரை ஐபிஎல் மற்றும் உள்ளூர் போட்டிகளில் மட்டுமே விளையாடி வந்தார்.

மேலும்,இவர் 2000 ஆம் ஆண்டில் பிறந்தவர்.ஆனால்,இந்தியாவின் சக தொடக்க வீரர்களான பிருத்வி ஷா மற்றும் சுப்மான் கில் ஆகியோர் 1999 இல் பிறந்தவர்கள்.

அதேபோல,ஆப்கானிஸ்தானின் முஜீப் ஸத்ரான் 21 ஆம் நூற்றாண்டில் பிறந்து டிசம்பர் 2017 இல் ஆண்கள் சர்வதேச விளையாட்டில் அறிமுகமான முதல் வீரர் ஆவார்.

தேவ்தத் படிக்கல் – அறிமுகம்:

படிக்கல் ஜூலை 7, 2000 அன்று கேரளாவின் எடப்பலில் பிறந்தார். 2011 ஆம் ஆண்டில், அவரது குடும்பம் ஹைதராபாத்தில் இருந்து பெங்களூருக்கு குடிபெயர்ந்தது,அங்கு அவர் கர்நாடக கிரிக்கெட் அகாடமியில் தனது பயிற்சியை தொடங்கினார். 2014 முதல், 16 வயதிற்குட்பட்ட மற்றும் 19 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் கர்நாடகாவிற்காக விளையாடினார்.பின்னர் 2017 ஆம் ஆண்டில், கர்நாடக பிரீமியர் லீக்கில் பெல்லாரி டஸ்கர்ஸ்காக  தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஐபிஎல்:

இவர் 2018–19 ரஞ்சி டிராபியில் கர்நாடகாவுக்காக அறிமுகமானார். இதனையடுத்து,2019 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக்கிற்கான வீரர் ஏலத்தில் அவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வாங்கியது.இதன் பின்னர்,ஐபிஎல் வரலாற்றில் தனது முதல் நான்கு போட்டிகளில் மூன்று அரைசதங்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

2019–20 ஆம் ஆண்டு விஜய் ஹசாரே டிராபியில் கர்நாடகாவுக்காக பதினொரு போட்டிகளில் 609 ரன்கள் எடுத்து போட்டிகளில் அதிக ரன் எடுத்த வீரராக இவர் இருந்தார்.

மேலும்,2020 இந்தியன் பிரீமியர் லீக்கிற்கான (ஐபிஎல்) “வளர்ந்து வரும் வீரர் விருதை” படிக்கல் வென்றார்.தனது முதல் ஐபிஎல் பருவத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்காக 15 போட்டிகளில் 473 ரன்கள் எடுத்தார்.கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஐபிஎல் 2021 இல்,அவர் ஆறு போட்டிகளில் 195 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.