“ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் இறப்பது இனப்படுகொலைக்குச் சமம்”- அலகாபாத் உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்..!

ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் இறப்பது இனப்படுகொலைக்குச் சமமாகக் கருதப்படும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையானது விஸ்வரூபம் எடுத்து வருகிறது.இதனால்,கொரோனா காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டுகிறது.ஏனெனில்,கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு இறப்பதை விட மருத்துவமனைகளில் ஆக்சிஜன் மற்றும் முறையான சிகிச்சை கிடைக்காமல் இறப்பவர்களே அதிகமாக உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து,உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள  மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதாக சமூக ஆர்வலர்கள் சிலரால் பல்வேறு பொதுநல வழக்குகள் போடப்பட்டன.

இந்த வழக்கை செவ்வாய்க்கிழமையன்று விசாரித்த அலகாபாத் நீதிமன்ற நீதிபதிகள் அஜித்குமார் மற்றும் சித்தார்த் வர்மா ஆகியோர், “மருத்துவமனைகளுக்கு  தேவைப்படும் ஆக்ஸிஜனை கொடுக்காமல் இருப்பது ஒரு குற்றச் செயலாகும். மேலும்,ஆக்சிஜன் கிடைக்காமல் கொரோனா நோயாளிகள் இறப்பது  ஒரு ‘இனப்படுகொலைக்கு சமமாகக்’ கருதப்படும்.

ஏனெனில்,விஞ்ஞானம் மிகவும் முன்னேறியிருக்கும் போது, இந்த நாட்களில் இதய மாற்று அறுவை சிகிச்சை மற்றும் மூளை அறுவை சிகிச்சை கூட உடனடியாக நடைபெறுகையில்,ஆக்சிஜன் இல்லாமல் மக்களை எப்படி இறக்க அனுமதிக்க முடியும்.

எனவே,ஆக்சிஜன் கொடுக்கும் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகளும் மற்றும் அரசு நிர்வாகமும்  இதற்கு பொறுப்பேற்றுக் கொண்டு ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு எதிராக உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்”,என்று உத்தரவிட்டுள்ளனர்.