தொடரும் மருத்துவர்களின் மரணம்…! 8 மாத கர்ப்பிணி மருத்துவர் கொரோனா தொற்றால் பலி…!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 8 மாத கர்ப்பிணி மருத்துவர் உயிரிழப்பு.

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் சேர்ந்த கார்த்திகா (29) முதுநிலை பயிற்சி மருத்துவர் ஆவார். இவருக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம்தான் திருமணம் நடைபெற்றது. கர்ப்பிணியான மருத்துவர் கார்த்திகா. அவருக்கு சில தினங்களுக்கு முன்பு தான் குடும்பத்தினர் வீட்டிலேயே வைத்து சீமந்தம் நடத்தியதாக கூறப்படுகிறது.

இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவருக்கு கொரோனாவின் தீவிரம் அதிகமாக காணப்பட்ட காரணத்தால், சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி சற்று முன் உயிரிழந்துள்ளார். மருத்துவர் கார்த்திகா உயிரிழப்பதற்கு முன்பு தனது செல்போனில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் தயவுசெய்து கொரோனா வைரசை யாரும் எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். என்னால் இப்போது பேசக்கூட முடியவில்லை. இருப்பினும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காகவே பேசுகிறேன். அனைவரும் முக கவசம் அணிந்து பாதுகாப்பாக இருங்கள் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, மதுரையை சேர்ந்த கர்ப்பிணி மருத்துவர் சண்முகப்பிரியா அவர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். இது பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது சென்னையில் கார்த்திகா என்ற கர்ப்பிணி மருத்துவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.