#DCvCSK: சென்னை அணியை 136 ரன்களில் சுருட்டிய டெல்லி!

ஐபிஎல் தொடரின் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்துள்ளது. 

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 14-வது சீசனின் 50வது லீக் போட்டியில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இரண்டாம் இடத்தில் உள்ள டெல்லி கேபிடல்ஸ் அணியும் விளையாடி வருகிறது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டெல்லி அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், டு பிளெசிஸ் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க, மொயீன் அலியும் வந்த உடனே அவுட்டானார். இதைத் தொடர்ந்து இன்று ரெய்னாவுக்கு பதில் அணியில் இடம்பெற்ற ராபின் உத்தப்பா 19 ரன்கள் மட்டுமே அடித்து வெளியேறினார்.

இவர்களை தொடர்ந்து வந்த கேப்டன் தோனி மற்றும் அம்பதி ராயுடு ஆகியோர் சற்று நிதானமாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தனர். பின்னர் தோனி 18 ரன்களில் ஆட்டமிழக்க, இறுதியாக சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 136 ரன்களை எடுத்துள்ளது. இறுதி வரை களத்தில் இருந்த அம்பதி ராயுடு அதிகபட்சமாக 43 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார்.

டெல்லி அணி பொறுத்தளவில் சிறப்பாக பந்துவீசிய அக்சர் படேல் 2, அன்ரிச் நார்ட்ஜே, அவேஷ் கான், ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர். இந்த நிலையில் சென்னையை 136 ரன்களில் சுருட்டிய டெல்லி 137 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்