சூப்பர் அறிவிப்பு…இந்த ஊரில் தோட்டக்கலைப் பூங்கா;ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு – தமிழக அரசு அரசாணை!

கடலூர்:வடலூரில் தோட்டக்கலைப் பூங்கா அமைக்க ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு.

கடலூர் மாவட்டம் வடலூரில் தோட்டக்கலைத் துறை மூலம் தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையின் பண்ணை வரவின நிதியிலிருந்து ரூ.1 கோடி மதிப்பீட்டில் பூங்கா அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக,அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:

“மாண்புமிகு வேளாண்மை-உழவர் நலத் துறை அமைச்சர் அவர்கள் 14.8.2021 அன்று சட்டப்பேரவையில் வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் பிறவற்றுடன் பின்வரும் அறிவிப்பினை மேற்கொண்டுள்ளார்கள் :

“தோட்டக்கலைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் 24 பூங்காக்கள் பொது மக்களுக்கு பொழுதுபோக்கு மையங்களாகவும்,மாணவர்களுக்குப் பயிலும் களங்களாகவும் பல்வேறு வகையான அழகிய,அரிய வகைத் தாவரங்கள் மரங்களைக் கொண்ட தொகுப்பு மையங்களாகத் திகழ்கின்றன.பொதுமக்கள் உடற்பயிற்சி,நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கும்,தூய காற்றினை சுவாசித்து, பசுமையான சூழலைக் கண்டு மனம் மகிழ்வதற்கும்,சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் விளையாடுவதற்கும் சிறந்த களமாக பூங்காக்கள் விளங்குகின்றன.

இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து நடப்பாண்டில் கடலூர் மாவட்டம் வடலூர் பேரூராட்சியில் புதிதாக தோட்டக்கலைப் பூங்கா துவங்கப்படும்.இத்திட்டம் ஒரு கோடி ரூபாய் செலவில் மாநில அரசு நிதியில் செயல்படுத்தப்படும்”,என்று அறிவித்தார்.

இந்நிலையில்,கடலூர் மாவட்டம் வடலூர் பேரூராட்சியில் புதிதாக தோட்டக்கலைப் பூங்கா துவங்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

author avatar
Castro Murugan