கவுன்சிலர் to குடியரசுத் தலைவர் – வேட்பாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு!

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மு நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின் 15 வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு பதவியேற்ற நிலையில்,அவரின் பதவிக்காலம் வருகின்ற ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.இதனால்,அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறுவுள்ளது.

இந்நிலையில்,டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று இரவு நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் பிரதமர் மோடி,மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,பாஜக தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் பங்கேற்றனர்.அதன்பிறகு,குடியரசுத் தலைவர் தேர்தலை முன்னிட்டு பாஜக சார்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து,ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், “திருமதி. திரௌபதி முர்மு ஜி தனது வாழ்க்கையை சமுதாயத்திற்கு சேவை செய்வதற்கும், ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காகவும் அர்ப்பணித்துள்ளார். அவர் சிறந்த நிர்வாக அனுபவம் மற்றும் ஒரு சிறந்த ஆளுநராக பதவி வகித்தவர். அவர் நம் நாட்டின் சிறந்த ஜனாதிபதியாக இருப்பார் என்று நான் நம்புகிறேன்.

மில்லியன் கணக்கான மக்கள், குறிப்பாக வறுமையை அனுபவித்தவர்கள் மற்றும் கஷ்டங்களை எதிர்கொண்டவர்கள், ஸ்ரீமதியின் வாழ்க்கையிலிருந்து பெரும் வலிமையைப் பெறுகிறார்கள். திரௌபதி முர்மு ஜி. கொள்கை விஷயங்களில் அவரது புரிதல் மற்றும் இரக்க குணம் நம் நாட்டிற்கு பெரிதும் பயனளிக்கும்” என்று கூறியுள்ளார்..

திரௌபதி முர்மு யார்?

ஒடிசாவின் சந்தால் பழங்குடியின சமூகத்தில் பிறந்த திரௌபதி முர்மு 1997 இல் ராய்ரங்பூர் நகர் பஞ்சாயத்தில் ஒரு கவுன்சிலராக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.மேலும் 2000 இல் ஒடிசா மாநில அரசாங்கத்தில் பாஜக அமைச்சராகவும் பின்னர் 2015 இல் ஜார்கண்ட் மாநில ஆளுநராகவும் பதவி வகித்தவர்.இதனால்,ஜார்கண்டின் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையையும் திரௌபதி முர்மு பெற்றவர்.

இதனிடையே,குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.டெல்லியில் என்சிபி தலைவர் சரத் பவார் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா நிறுத்த ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது.இந்த நிலையில்,எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா ஜூன் 27-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment