மஞ்சள் நிற ஜெர்சியுடன் இது தான் கடைசி போட்டியா ? பதிலளித்த தோனி

ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தற்போது ஓய்வு இல்லை என்று  தோனி தெரிவித்துள்ளார்.

 இருபது ஓவர் உலககோப்பை,ஒரு நாள் தொடருக்கான உலககோப்பை மற்றும் மினி உலககோப்பையை  தோனி தலைமையில் இந்திய அணி வென்றுள்ளது.ஐபிஎல் தொடரில் சென்னை அணி இவரது தலைமையில் மூன்று முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. டெஸ்ட் போட்டியில்  இருந்து தோனி ஓய்வு பெற்ற பின்,அவர் ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில்  விளையாடி வந்த நிலையில்,   தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இதனைத்தொடர்ந்து தற்போது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த போட்டியில் சென்னை அணி பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை ஏற்கனவே இழந்து விட்டது.இதனால் சென்னை அணியின் கேப்டனாக உள்ள தோனி இந்த ஆண்டுடன் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஒய்வு பெற உள்ளதாக செய்திகள் அதிகம் உலாவந்தது.

இதனிடையே  இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் அணியுடன் சென்னை அணியுடன் விளையாடி வருகிறது.இந்த போட்டியில் டாஸ் போடும் போது வர்ணனையாளரான டேனி மோரிசன் தோனியிடம் கேள்வி ஒன்றை கேட்டார்.அதாவது ,மஞ்சள் நிற ஜெர்சியுடன் இது தான் உங்கள் கடைசி போட்டியா என்று கேள்வி எழுப்பினார்.இதற்கு பதில் அளித்த தோனி ,” கண்டிப்பாக இல்லை “என்று கூறினார்.தோனியின் கருத்து ரசிகர்கள் மத்தியில்  மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.