கொரோனா பீதி: உ.பி.யில் 11 ஆயிரம் கைதிகள் ஜாமீனில் விடுதலை

கொரோனா பீதி காரணமாக  உ.பி.யில் 11 ஆயிரம் கைதிகள் ஜாமீனில் விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் உலக நாடுகளை முழுவதும் மிரட்டி வருகிறது.இந்தியாவில் தற்போது இந்த வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது.இந்த வைரசால் இந்தியாவில் இதுவரை 800-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த  நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதன்விளைவாக  மளிகை கடைகள், காய்கறி கடைகள்,மருந்து கடைகள் தவிர எஞ்சிய கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது.

ஆனால் சிறைச்சாலைகளில் அதிக எண்ணிக்கையில் கைதிகள் இருப்பதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதற்கு இடையில் தான் உச்சநீதிமன்றம், கொரோனா வைரஸ் காரணமாக 7 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்படாத குற்றவாளிகளை நிபந்தனையில் விடுதலை செய்ய மாநில அரசுகள் ஆலோசனை செய்யலாம் என்று  உத்தரவு பிறப்பித்தது.எனவேதான்  உத்தரபிரதேச அரசு  அங்கு  சிறைகளில் உள்ள 11000 கைதிகளை அடுத்த 8 வாரங்களுக்கு ஜாமீன் மற்றும் பரோலில் விடுதலை செய்ய  முடிவு செய்துள்ளது.இதற்காக சிறைத்துறை மாநில அரசுக்கு  பரிந்துரை வழங்கிய நிலையில் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்  அனுமதி வழங்கியுள்ளார்.