மணமேடையாக மாறிய கொரோனா வார்டு…! முழுகவச உடையில் மணப்பெண்…!

கேரள மாநிலம் ஆலப்புழாவில் கொரோனா வார்டில் நடைபெற்ற திருமணம். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கொரோனா வைரஸ் நாட்டையே மாற்றி போட்டு விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த தொற்று பரவலால் நாட்டில் வித்தியாசமான சம்பவங்கள் பல இடங்களில் நடைபெறுகிறது.

அந்த வகையில் கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்தவர் சரத்குமார். இவருக்கு வயது 28. கத்தாரில் பணியாற்றி வந்த இவர் ஆலப்புழாவை சேர்ந்த அபிராமி என்னும் பெண்ணுடன் பல மாதங்களுக்கு முன்னதாக திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், கொரோனா காரணமாக தாய்நாடு திரும்ப முடியாத சரத், கடந்த மாதம் இந்தியா வந்தார்.

இந்நிலையில் ஏப்ரல் 25ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற முடிவான நிலையில், சரத் குமாருக்கும், அவரது தாயார் ஜீஜி-க்கும் எதிர்பாராதவிதமாக கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் ஏப்ரல் 21-ஆம் தேதி அரசு மருத்துவக் கல்லூரியில் இருவரும் அனுமதிக்கப்பட்டனர். மேலும் நிச்சயிக்கப்பட்ட தேதியில் திருமணம் நடைபெற வேண்டும், தள்ளிப் போக கூடாது என்பதற்காக இருவீட்டாரும் கலந்து ஆலோசித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று கொரோனா வார்டிலேயே திருமணத்தை நடத்த அனுமதி பெற்றனர்.

இதனையடுத்து, முழு கவச உடை அணிந்து அபிராமி கொரோன வார்டில், சரத்தின் தயார் மாலை எடுத்து கொடுக்க, இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். பின் கொரோனா வார்டில் இருந்த அனைவருக்கும் இனிப்பு  வழங்கினார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.