கொரோனா தடுப்பூசிக்கு ஒரே விலையை நிர்ணயிக்க வேண்டும் – மம்தா பானர்ஜி!

கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒரே விலையை நிர்ணயிக்க வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.

நாடுமுழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. தினமும் புதிதாக லட்சக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்படும் நிலையில், ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் நாளுக்கு நாள் உயிரிழந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், இந்த வைரஸை தடுப்பதற்காக ஊரடங்கு கடமையாக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் தற்பொழுது தடுப்பூசியும் போடப்பட்டுக் கொண்டிருக்கிறது.

முதல் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு தடுப்பூசி போட தொடங்கப்பட்ட நிலையில், மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போடலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த தடுப்பூசி மாநில அரசுகளுக்கு 400 ரூபாய், எனவும் தனியார் மருத்துவமனையில் 600 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது. இதுகுறித்து பல அரசியல் தலைவர்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில் தடுப்பூசிக்கு ஒரே விலையை நிர்ணயிக்க வேண்டும் என்று கோரிக்கையும் வலுத்து வருகிறது.

இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள், ஒவ்வொரு இந்தியருக்கும் வயது, ஜாதி, மதம் இருப்பிடம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் இலவச தடுப்பூசி வழங்க வேண்டும் எனவும், இந்திய அரசு தடுப்பூசிக்கு ஒரே விலையை நிர்ணயிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். ஒரே தேசம், ஒரே கட்சி, ஒரே தலைவர் என எப்பொழுதும் கூறக் கூடியவர்கள் உயிரைக் காப்பாற்றக்கூடிய தடுப்பூசிக்கு மட்டும் ஒரே விலையை நிர்ணயிக்க மறுக்கிறார்கள் எனவும் குற்றம் சாட்டியுள்ளார். இதோ அந்த பதிவு,

author avatar
Rebekal