குட் நீயூஸ்..”குடும்ப அட்டை இல்லாத 3 ஆம் பாலினத்தவர்களுக்கும் கொரோனா நிவாரண தொகை” – தமிழக அரசு உறுதி..!

குடும்ப அட்டை மற்றும் நலவாரிய அட்டை இல்லாத 3 ஆம் பாலினத்தவர்களுக்கும் கொரோனா நிவாரண தொகை வழங்குவதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதியளித்துள்ளது.

துாத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த,கிரேஸ் பானு என்பவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ,ரேஷன் அட்டை மற்றும் நலவாரிய அடையாள அட்டை இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கும்,கொரோனா நிவாரண நிதியாக 4,000 ரூபாய் வழங்க,அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதனையடுத்து,இந்த வழக்கானது உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மூன்றாம் பாலினத்தவருக்கான நல வாரியம்,கொரோனா காரணமாக இயங்கவில்லை .அதனால்,அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படவில்லை என்றார்.பின்னர்,அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம்,மனுதாரரின் கோரிக்கை குறித்து ஆலோசனை வழங்குவதாகவும்,அரசு அதை பரிசீலிக்கும் என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து,உடனடியாக நிவாரணம் தேவைப்படும் மூன்றாம் பாலினத்தவருக்கு உதவுவது குறித்து, அரசு முடிவெடுக்கும்படி,முதல் அமர்வு உத்தரவிட்டது.அரசு தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கையை தெரிவிக்கவும் உத்தரவிட்டு, விசாரணையை,தள்ளி வைத்தது.

இந்நிலையில்,இந்த வழக்கானது மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது,தமிழக அரசு  தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் கூறுகையில்,”11,449 மூன்றாம் பாலினத்தவர்களில் ரேசன் அட்டை வைத்துள்ள 2956 பேருக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.மீதமுள்ள 8493 பேருக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும்”,என்று உறுதியளித்தார்.

இதனைத் தொடர்ந்து,நீதிபதிகள் கூறியதாவது,”இந்த திட்டத்தை தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்பதால் மூன்றாம் பாலினத்தவர்கள் தங்களது முகவரியை அளிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.

மேலும்,நிவாரண தொகை பெறாமல் விடுபட்டவர்கள் குறித்து தெரிவிக்க வழக்கின் விசாரணையை நீதிபதிகள்,மூன்று வாரங்களுக்குத் தள்ளி வைத்துள்ளனர்.