கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்தவர் தப்பியோட்டம்.. காவல் ஆய்வாளர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளி தப்பியோடிய நிலையில், அந்த வழக்கின் முன்னேற்றம் குறித்து பூக்கடை காவல் நிலைய ஆய்வாளர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

சென்னையில் உள்ள ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனவால் பாதிக்கப்பட்ட 74 வயது நபர் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த முதியவர், கடந்த சில தினங்களுக்கு முன், அங்கிருந்து தப்பித்து வெளியே சென்றார்.

அந்த முதியவர் காணமால் போனதை அறிந்த அவரின் மகன், தனது தந்தையை கண்டுபிடித்து தருமாறு பூக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் பூக்கடை காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து, அந்த முதியவரை தேடி வந்தனர்.

இந்நிலையில், முதியவர் தப்பி சென்ற வழக்கில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பூக்கடை காவல் நிலைய ஆய்வாளர் நாளை பதிலளிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவளித்துள்ளது. மேலும், கொரோனா நோயாளிகளை சிறப்பு கவனம் செலுத்தி பாதுகாக்க வேண்டியது, அரசாங்கத்தின் கடமை எனவும் தெரிவித்துள்ளது.