கொரோனாவிற்கு இனிமேல் பிளாஸ்மா சிகிச்சை தேவை இல்லை…!

இனிமேல் கொரோனாவிற்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க தேவையில்லை என மத்திய அரசு அறிவிப்பு.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்த  வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பல்வேறு முறைகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கொரோனா சிகிச்சை முறைகளில் ஒன்றாக பிளாஸ்மா சிகிச்சை இருந்து வந்தது.

பிளாஸ்மா சிகிச்சை என்பது கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களிடம் இருந்து, பிளாஸ்மாவை தானமாகப் பெற்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட  நோயாளிகளுக்கு செலுத்தப்படுவதாகும். இந்நிலையில் இது தொடர்பாக, இந்த சிகிச்சை அறிவியல் சாராத பயன்பாடு மற்றும் பகுத்தறிவுக்கு ஒவ்வாதது என பல்வேறு விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவ வல்லுனர்கள் மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜய்ராகவன் மற்றும் இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில்  தலைவர் பல்ராம் பார்கவா உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதியிருந்தனர்.

இதுகுறித்து இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில், பிளாஸ்மா சிகிச்சை முறையில் எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்றும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவரை குணப்படுத்துவதில் பிளாஸ்மா சிகிச்சை எந்த பங்கும் அளிக்க வில்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, இனிமேல் கொரோனாவிற்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க தேவையில்லை என்று மத்திய அரசுக்கு மருத்துவ கவுன்சில் பரிந்துரை செய்தது.  பரிந்துரையின் அடிப்படையில், மத்திய அரசும் பிளாஸ்மா சிகிச்சையை கைவிடுவதாக அறிவித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.