டோக்கியோ ஒலிம்பிக் கிராமம்;முதல் கொரோனா பாதிப்பு …!

டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஒலிம்பிக் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகின்ற 23 ஆம் தேதி 32-வது ஒலிம்பிக் போட்டி ஆரம்பிக்கவுள்ளது.இந்த ஒலிம்பிக் போட்டியானது ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த ஒலிம்பிக் போட்டியில் 205 நாடுகளைச் சேர்ந்த 11,000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கவுள்ளார்கள்.இதற்காக ஒலிம்பிக் கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது.மேலும்,இங்கு தினமும் கொரோனா பரிசோதனைகள்,விதிமுறைகள் போன்றவை கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றன.ஏனெனில்,டோக்கியோவில் தற்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில்,ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஒலிம்பிக் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து,டோக்கியோ ஒலிம்பிக் குழுவை சேர்ந்த மாசா தகாயா செய்தியாளர்களிடம் கூறுகையில்:”கொரோனா பரிசோதனையின் போது ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கிராமத்தில் ஏற்பட்ட முதல் கொரோனா வழக்கு ஆகும்.இப்போது இந்த நபர் ஒரு ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.”,என்று தெரிவித்தார்.

கொரோனா பாதித்த நபர் ஒரு வெளிநாட்டவர் என்று ஜப்பானிய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன.இந்த ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் ஜப்பானிய பொதுமக்களின் எதிர்ப்பை எதிர்கொள்கின்றன.ஏனெனில், அவர்கள் புதிய கொரோனா தொற்று ஏற்படுமோ என்று அஞ்சுகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து,டோக்கியோ 2020 விளையாட்டுப் போட்டிகளின் தலைமை அமைப்பாளர் சீகோ ஹாஷிமோடோ கூறுகையில்:”கொரோனா பரவலாக ஏற்பட்டால் விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள ஒலிம்பிக்  அமைப்பாளர்கள் தயாராக உள்ளனர்.

எனவே,அமைப்பாளர்கள் கொரோனா குறித்த உண்மை நிலவரத்தை மறைக்க மாட்டார்கள்.இருப்பினும்,ஜப்பானுக்கு வரும் விளையாட்டு வீரர்கள் அநேகமாக மிகவும் கவலையாக இருக்கிறார்கள். எனக்கு அது புரிகிறது.” என்று அவர் கூறினார்.

எனினும்,பாதிக்கப்பட்ட நபர் விளையாட்டு வீரர் அல்ல.அவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்றும்,ஒலிம்பிக் போட்டிகள் ஏற்பாட்டுக்காக வந்தவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆனால்,அவர் எந்த நாட்டை சேர்ந்தவர் மற்றும் பெயர் குறித்த விபரங்கள் இன்னும் முழுமையாக தெரிவிக்கப்படவில்லை.