டோக்கியோ ஒலிம்பிக்;அமெரிக்காவை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனைக்கு கொரோனா உறுதி…!

அமெரிக்காவை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை கோகோ காப்க்கு,கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகின்ற 23 ஆம் தேதி 32-வது ஒலிம்பிக் போட்டி ஆரம்பிக்கவுள்ளது.இந்த ஒலிம்பிக் போட்டியானது ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த ஒலிம்பிக் போட்டியில் 205 நாடுகளைச் சேர்ந்த 11,000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கவுள்ளார்கள்.இதன்காரணமாக,ஒலிம்பிக் கிராமம் உருவாக்கப்பட்டு,விளையாட்டு வீரர்களுக்கு தினமும் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில்,போட்டியில் கலந்து கொள்ளும் 80 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில்,அமெரிக்காவை சேர்ந்த 17 வயது டென்னிஸ் வீராங்கனை கோகோ காப்க்கு,கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்காரணமாக ஒலிம்பிக் போட்டியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டுள்ளார்.

மேலும்,இதுகுறித்து  அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:”கொரோனா பரிசோதனையில் எனக்கு பாசிடிவ் என உறுதியாகியுள்ளது.இதனால்,டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட முடியாது என்ற செய்திகளைப் பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் ஏமாற்றமடைகிறேன். ஒலிம்பிக்கில் அமெரிக்கா சார்பாக பங்கேற்பது எப்போதுமே என்னுடைய கனவாகவே இருந்தது, எதிர்காலத்தில் இதை நனவாக்க இன்னும் பல வாய்ப்புகள் இருக்கும் என்று நம்புகிறேன். ஒவ்வொரு ஒலிம்பியனுக்கும் முழு ஒலிம்பிக் குடும்பத்துக்கும் TEAM USA வாழ்த்துக்கள் மற்றும் விளையாட்டு போட்டிகள் பாதுகாப்பாக நடைபெற விரும்புகிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இவர் இத்தாலியின் பாரமா நகரில் கடந்த மே மாதம் நடைபெற்ற எமிலியா ரோமாக்னா ஓபன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் சீன வீராங்கனை வாங் கியாங்கை 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இரட்டையர் சுற்று பிரிவு இறுதி போட்டியிலும் சக நாட்டு வீராங்கனையான கேத்ரின் மெக்நலியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை காப் வென்றுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு,ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.ஆனால்,அவர் பெயர் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.