காற்றோட்ட வசதியுடன் கூடிய கூல் “பிபிஇ கிட்”-மும்பை மாணவர் கண்டுப்பிடிப்பு..!

காற்றோட்ட வசதியுடன் கூடிய “பிபிஇ கிட்” ஒன்றை மும்பையின் கே.ஜே. சோமையா பொறியியல் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு மாணவர் நிஹால் சிங் ஆதர்ஷ் என்பவர் கண்டுபிடித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில்,தங்கள் உயிரைப் பணயம் வைக்கும் முன்கள சுகாதாரப் பணியாளர்களுக்கு உதவிடும் நோக்கில்,மும்பையின் கே.ஜே.சோமையா பொறியியல் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு மாணவர் நிஹால் சிங் ஆதர்ஷ்(வயது 19) என்பவர்,பிபிஇ கிட் உடையில் ஒரு சிறிய காற்றோட்ட வசதி முறையை உருவாக்கியுள்ளார்.

இதுகுறித்து,மாணவர் நிஹால் சிங் ஆதர்ஷ் கூறுகையில்,”என் அம்மா கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் ஒரு மருத்துவர். அவர் ஒவ்வொரு நாளும் வீடு திரும்பியபின்,பிபிஇ உடை அணிவதால் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் எதிர்கொள்ளும் சிரமத்தைப் பற்றி கூறினார்.அதனால்,கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு உதவிடும் வகையில்,பிபிஇ கிட் உடையில் ஒரு சிறிய காற்றோட்ட வசதி முறையை உருவாக்க நினைத்தேன்.

அதன்படி,தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொழில்முனைவோர் மேம்பாட்டு வாரியத்தின் (NSTEDB) ஆதரவைப் பெற்று,ஆர்ஐஐடிஎல்லில் தலைமை கண்டுபிடிப்பாளர் மற்றும் புனேவின் டசால்ட் சிஸ்டம்ஸ் தலைமை நிர்வாக அதிகாரியான கவுரங் ஷெட்டி உதவியுடன்,”கோவ்-டெக்  வெண்டிலேசன் அமைப்பு” என்ற கருவியை கண்டுபிடித்தேன்.இதில்,6 முதல் 8 மணி நேரம் நீடிக்கும் லித்தியம் அயன் பேட்டரி வசதியுள்ளது.

 

அதன்படி,இந்த பெல்ட் போன்ற கருவியை பிபிஇ உடையுடன் இணைத்து அணிந்து கொள்ளலாம்.அதனால்,இந்த பிபிஇ கிட் உடைக்குள் இருக்கும்போது,விசிறியின் கீழ் அமர்ந்திருப்பதைப் போன்று இருக்கும்.

மேலும்,நம்மைச் சுற்றியுள்ள காற்றை,சுத்தமான காற்றாக மாற்றி பிபிஇ உடைக்குள் அனுப்புகிறது.அதாவது,100 விநாடிகளுக்கு ஒரு முறை,பயனருக்கு புதிய சுத்தமான காற்றினை வழங்குகிறது.

மேலும்,பல்வேறு பூஞ்சை தொற்றுநோய்களிலிருந்தும் இந்த வென்டிலேசன் கருவி பாதுகாக்கிறது”,என்று தெரிவித்தார்.