8 மாதத்திற்கு முன்பே தரகர் சஞ்சய் ஜெயின் என்னை தொடர்பு கொண்டார் – காங்கிரஸ் எம்எல்ஏ

8 மாதத்திற்கு முன்பே தரகர் சஞ்சய் ஜெயின் என்னை தொடர்பு கொண்டார் – காங்கிரஸ் எம்எல்ஏ

கைது செய்யப்பட்ட இடைத்தரகர் சஞ்சய் ஜெயின் சுமார் 8 மாதங்களுக்கு முன்பு தன்னை தொடர்பு கொண்டதாக  காங்கிரஸ் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியின் அசோக் கெலாட் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. துணை முதலமைச்சராக சச்சின் பைலட் இருந்து வந்தார்.ஆனால் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து சச்சின் தனது ஆதரவு எம்எல்ஏக்களை அழைத்துக்கொண்டு மும்பைக்கு சென்றுவிட்டார்.இதன் பின்னர் காங்கிரஸ் கட்சி சார்பில் இரண்டு முறை  எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தப்பட்டது.இந்த இரு கூட்டத்திலும்  சச்சின் பைலட் மற்றும் அவரது எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டும் பங்கேற்கவில்லை.பின்னர்  துணை முதல்வர் பதவியிலிருந்தும், மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்தும் சச்சின் பைலட் நீக்கப்பட்டார். மேலும் அமைச்சர் பதவியிலிருந்து, விஸ்வேந்திர சிங், ரமேஷ் மீனா ஆகியோரும் நீக்கப்பட்டனர்.

இதனால் சச்சின் பைலட் மற்றும் 18 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் சிபி ஜோஷி கடந்த செவ்வாய்க்கிழமை தகுதிநீக்க நோட்டீஸ் அனுப்பினார். சபாநாயகர் சி.பி. ஜோஷியின் தகுதிநீக்க நோட்டீஸுக்கு எதிராக சச்சின் பைலட் மற்றும் அவரது 18 ஆதரவாளர்கள் எம்.எல்.ஏ. க்கள் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.அப்பொழுது சச்சின் பைலட் மற்றும் அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கத்தடை விதிப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.மேலும் வருகின்ற செவ்வாய் கிழமை வரை நடவடிக்கை எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் தெரிவித்தது.

இந்த விவகாரத்தில் பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றது.இதற்கு மத்தியில் தான் சமூக வலைதளங்களில் ஆடியோ ஒன்று வைரலானது.அந்த ஆடியோவில் ,மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ., பன்வாரிலால் சர்மா ,சஞ்சய் ஜெயின் , அசோக் அரசை கவிழ்ப்பது தொடர்பாக நடத்திய பேச்சுவார்த்தை இடம் பெற்றிருந்தது.இந்த விவகாரம் ராஜஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பை மீண்டும் ஏற்படுத்தியது.இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா கூறுகையில், அரசை கவிழ்க்கும் சதி செயலில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

இதனிடையே  இடைத்தரகர் சஞ்சய் ஜெயின் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏ   ராஜேந்திர குதா கூறுகையில்,கைது செய்யப்பட்ட இடைத்தரகர் சஞ்சய் ஜெயின் சுமார் 8 மாதங்களுக்கு முன்பு தன்னை தொடர்பு கொண்டதாக  தெரிவித்துள்ளார்.மேலும் என்னிடம் வந்து பாஜக மூத்த தலைவர்களான வசுந்தரா ராஜே மற்றும் பிற   தலைவர்களைச் சந்திக்கும்படி கேட்டுக் கொண்டார்.ஆனால்  இந்த முயற்சியில் அவர்களால் வெற்றிபெற முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube