விளவங்கோடு தொகுதியில் விஜயதரணி ஹாட்ரிக் வெற்றி..!

விளவங்கோடு தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விஜயதரணி 71,764 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின் வாக்குகள் எண்ணும் பணியானது இன்று காலை 8 மணி முதல் தற்போது வரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.தற்போதைய நிலவரப்படி,திமுக 159 தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதால் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் தருவாயில் உள்ளது.

இந்த நிலையில்,கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில்,திமுக கூட்டணி கட்சிகளின் சார்பாக போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விஜயதரணி 71,764 வாக்குகள் பெற்று,தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஜெயசீலனை தோற்கடித்துள்ளார்.

இதனையடுத்து,இரண்டு முறை தொடர்ந்து எம்.எல்.ஏ வாக இருக்கும் விஜயதரணி தற்போது மூன்றாவது முறையும் அதிக வாக்குகள் பெற்று தனது ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

இதற்கு முன்னதாக விஜயதரணி,கடந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் சரியாக பணி செய்யவில்லை மற்றும் தொகுதி பக்கம் செல்வதில்லை என பல குற்றச்சாட்டுகள் எழுந்தன.அதுமட்டுமல்லாமல் விஜயதரணிக்கு சீட் கொடுக்கக்கூடாது என சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியினரே போராட்டம் நடத்தினர்.மேலும்,விஜயதரணி பாஜகவில் சேரப்போவதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால்,இதற்கு மறுப்புத் தெரிவித்த விஜயதரணிக்கு தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பு கொடுத்தது.இந்த வாய்ப்பினை விஜயதரணி பயன்படுத்திக்கொண்டார்.மேலும்,மக்களின் பாஜக எதிர்ப்பு மனநிலையும் மற்றும் திமுக கூட்டணி பலமும் விஜயதரணிக்கு பலமாக அமைந்தது. அதனால்,விஜயதரணி தொடர்ந்து 3 வது முறையாக வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.