முதல்வராக பொறுப்பேற்கவுள்ள முக ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் – எடப்பாடி பழனிசாமி

தமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள திமுக மு.க ஸ்டாலினுக்கு, எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளைக் கைப்பற்றி, தனி பெரும்பான்மையுடன் முக ஸ்டாலின் முதல்வர் பொறுப்பேற்கவுள்ளார். திமுகவின் வெற்றிக்கு பலரும் நேரில் சென்றும், சமூகவலைத்தளம் மூலமாகவும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்காததால் எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பன்வாரிலாலுக்கு சேலத்தில் இருந்தே அனுப்பியுள்ளார்.

தமிழக முதலமைச்சராக வரும் 7ம் தேதி திமுக தலைவர் முக ஸ்டாலின் பதவி ஏற்கிறார். கொரோனா பரவ காரணமாக ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் பதவியேற்பு விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தனி பெரும்பான்மையுடன் முதல்வராக பொறுப்பேற்கவுள்ள திமுக முக ஸ்டாலினுக்கு, எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்த பதிவில், தமிழகத்தின முதல்வராக பதவியேற்கவுள்ள மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

இதற்கு மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிகச் சிறந்த தமிழகத்தை உருவாக்க தங்களது ஆலோசனையும் ஒத்துழைப்பும் தேவை. ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம், அத்தகைய ஜனநாயகம் காப்போம் என கூறியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்