தமிழக காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் கட்டாய லீவு… மிகைநேர ஊதியம் – டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு!

தமிழ்நாடு காவல்துறையினருக்கு வாராந்திர ஓய்வு நாள், பிறந்தநாள் மற்றும் திருமண நாட்களில் விடுமுறை வழங்க காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு சுற்றறிக்கை.

இதுதொடர்பாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், காவலர்கள் தங்கள் உடல் நலனை பேணிக்காகவும், தங்களது குடும்பத்தினருடன் போதிய நேரம் செலவிடுவதற்கும், வாரத்தில் ஒரு நாள் கட்டாய விடுமுறை அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

வார நாட்களில் ஓய்வு தேவைப்படவில்லை என தெரிவிக்கும் காவலர்களுக்கும், ஓய்வு தினத்தன்று பணியில் இருக்கும் காவலர்களுக்கும் மிகைநேர ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றும் காவலர்களின் பிறந்தநாள் மற்றும் திருமண நாட்களில் அவர்களது குடும்பத்தாருடன் கொண்டாட ஏதுவாக அந்தந்த நாட்களில் அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழக காவல்துறையின் சார்பாக பிறந்தநாள் மற்றும் திருமண நாள் வாழ்த்து செய்தி, மாவட்ட, மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையின் வானொலி மூலமாக, சம்மந்தப்பட்ட ஆளிநர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.

இந்த அறிவுரைகளை அனைத்து மாநகர காவல் ஆணையாளர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும் தவறாமல் செயற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். தமிழாகி டிஜிபி சைலேந்திரபாபுவின் இந்த அறிவிப்பு காவலர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்