கல்லூரி மாணவர் சந்தேக மரணம்:உடனடியாக உரிய நீதி விசாரணை வேண்டும் – சீமான் வலியுறுத்தல்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கல்லூரி மாணவர் தம்பி மணிகண்டன், காவல்துறையினரின் விசாரணைக்குப் பிறகு சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக உரிய நீதிவிசாரணை நடத்த வேண்டும்  என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே நீர்க்கோழிந்தல் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்ற மாணவர்,கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார்.கடந்த 5 ஆம் தேதியன்று பரமக்குடி – கீழத்தூவல் சாலையில் கீழத்தூவல் காவல் நிலைய போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது,அவ்வழியாக பைக்கில் தன் நண்பருடன் வந்த மணிகண்டனை,போலீஸார் கையசைத்து நிறுத்தச் சொல்லியிருக்கின்றனர்.

ஆனால்,மணிகண்டன் தனது பைக்கை நிறுத்தாமல் வேகமாகச் சென்றதாகவும்,பின்னர் போலீஸார் மணிகண்டனைப் பின்தொடர்ந்து சென்று பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து,மணிகண்டனின் பைக், செல்போன் ஆகியவற்றைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும்,நடந்த சம்பவம் குறித்து மணிகண்டனின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.காவல் நிலையத்துக்கு வந்த மாணவரின் பெற்றோர் மணிகண்டனை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால்,இரவு வீட்டுக்கு வந்த சிறிது நேரத்தில் மணிகண்டன் 3 முறை ரத்த வாந்தி எடுத்ததாக சொல்லப்படுகிறது.மேலும்,அவரது ஆண் உறுப்பில் வீக்கம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.இதனைத் தொடர்ந்து,அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட மணிகண்டனை மருத்துவர் பரிசோதனை செய்து விட்டு அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறினார்.இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவரின் பெற்றோர், உறவினர்கள் அவர் போலீஸார் தாக்கியதால்தான் உயிரிழந்ததாகச் சொல்லி, முதுகுளத்தூர் – பரமக்குடி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில்,சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்த கல்லூரி மாணவர் மணிகண்டன் மரணத்திற்கு உரிய நீதிவிசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே நீர்க்கோழிந்தல் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் தம்பி மணிகண்டன் காவல்துறையினரின் விசாரணைக்குப் பிறகு, மர்மமான முறையில் உயிரிழந்த செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தேன். அவரை இழந்து ஆற்ற முடியாதப் பேரிழப்பில் சிக்கித் தவிக்கும் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

நல்ல உடல்நலத்தோடு இருந்த மணிகண்டன் திடீரென மரணித்திருப்பது காவல்துறையினர் தாக்குதலால் நிகழ்ந்ததாக இருக்கலாம் என அவரது பெற்றோரும், பொதுமக்களும் தெரிவிக்கும் ஐயப்பாட்டிற்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டியது அவசியமாகும்.

காவல்துறையின் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் இளைஞர்கள் தாக்குதலுக்கு உள்ளாவதும், அவ்வப்போது மரணமடைவதும் தமிழகத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் நிலையில் நடந்தேறியிருக்கிற தம்பி மணிகண்டனின் மரணம் கொலையாக இருக்கலாம் எனும் வாதத்தில் அடிப்படையில்லாமலில்லை. ஆகவே, தமிழக அரசு இவ்விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு கல்லூரி மாணவர் தம்பி மணிகண்டனின் மர்ம மரணம் குறித்து உரிய நீதிவிசாரணை நடத்த வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.