முதலமைச்சர் வேட்பாளரை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி – அமைச்சர் ஜெயக்குமார்

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி அதிகாரபூர்வமாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.ஆனால் தமிழகத்தில் முதல்வர் வேட்பாளரை அதிமுக முடிவு செய்தாலும் அதை பாஜக தான் அறிவிக்கும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறினார்.முருகனை தொடர்ந்து பாஜகவின் தலைவர்களான வானதி சீனிவாசன்,அண்ணாமலை உள்ளிட்டோர் இதே கருத்தை கூறி வருகின்றனர்.

இந்நிலையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், அதிமுகவை யாரும் நிர்பந்திக்க முடியாது. கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. தனிப்பெரும்பான்மையுடன் தான் அதிமுக ஆட்சி அமையும்.சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி .அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளரை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என்று தெரிவித்துள்ளார்.