கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு தேவை – ஓபிஎஸ்

கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களின் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் விரைந்து தீர்வு காண வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் அறிக்கை.

இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசின் வேட்டி-சேலை வழங்கும் திட்டம், பள்ளி மாணவ, மாணவியருக்கான விலையில்லா சீருடை வழங்கும் திட்டம், முதியோர் ஓய்வூதியத் திட்டத்திற்கான வேட்டி-சேலை வழங்கும் திட்டம் ஆகிய அரசுத் திட்டங்களை செயல்படுத்தி வருவதோடு, நெசவாளர் சங்கங்களுக்கு சந்தைப்படுத்துவதில் உறுதுணையாக இருந்து கைத்தறி ரங்கங்களை பிரபலப்படுத்துதல்.

வாடிக்கையாளர்களாக மாறிவரும் இரசனைக்கேற்ப பாரம்பரியம் மற்றும் நவீன ரகங்களை உருவாக்குதல், பல்வேறு வகையிலான புதுமையான திட்டங்களைச் செயல்படுத்துதல், கைத்தறி நெசவாளர்களுக்கு தொடர் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் என பல்வேறு பணிகளை மேற்கொண்டு வரும் நிறுவனமாக ‘கோ-ஆப்டெக்ஸ்’ என அனைவராலும் அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கம் விளங்குகிறது.

கைத்தறித் துறைக்கு தன்னிகரற்ற பங்களிப்பை அளித்து வருவதோடு, நெசவாளர்களுக்கு நீடித்த வேலைவாய்ப்பினை வழங்கி வரும் இந்த கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், தன்னுடன் இணைக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேலான கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்ளால் உற்பத்தி செய்யப்படுகின்ற துணிகளை நாடு முழுவதும் பரவியுள்ள தன்னுடைய நூற்றுக்கணக்கான கிளைகள் மூலமாக விற்பனை செய்யும் பணியினை மேற்கொண்டு வருகிறது.

எனவே, பல விற்பனையகங்களில் கழிப்பிட வசதிகள் இல்லை என்றும், தற்காலிக ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்கப்படுவதில்லை என்றும், சில அதிகாரிகள் பெண் ஊழியர்களிடம் தகாத வார்த்தைகளை பயன்படுத்துவதாகவும், விற்பனையில் சரிவை ஏற்படுத்தும் செயல்கள் நடப்பதாகவும் கூறப்படுகிறது.

இதற்குத் தீர்வு காணும் வகையில், முதலமைச்சர், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் ஆகியோரிடம் கோரிக்கை மனுக்கள் அளித்தும் எந்தப் பயனும் இல்லை என்பதால், வரும் 5-ஆம் தேதி கோ-ஆப்டெக்ஸ் தலைமையகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தப் போவதாகவும், அதற்கும் தீர்வு காணப்படவில்லையென்றால், வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவதைத் தவிர தங்களுக்கு வேறுவழியில்லை என்றும் கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளதாக பத்திரிகையில் செய்தி வந்துள்ளது.

கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுடைய கோரிக்கைகளில் நிதி தொடர்பான கோரிக்கைகள் ஏதும் இல்லாத சூழ்நிலையில், அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பதும், அவர்களுடைய போராட்ட அறிவிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியதும் மாநில அரசின் கடமை.

எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு, கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுடைய பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் விரைந்து தீர்வு காண தொடர்புடைய அமைச்சருக்கும், அரசு அதிகாரிகளுக்கும் உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்