கொலை செய்யப்பட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர்;ரூ.1 கோடி நிதியுதவி வழங்கிய முதல்வர் ஸ்டாலின்!

சென்னை:கொலை செய்யப்பட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவியை அவரின் மனைவியிடம் முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார்.

திருச்சி மாவட்டம், நவல்பட்டு காவல் நிலையத்தில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த திரு. பூமிநாதன் அவர்கள் 21-11-2021 அன்று அதிகாலை ஆடுகள் திருடும் கும்பலை இரு சக்கர வாகனத்தில் விரட்டிச் சென்று கீரனூர் அருகே மடக்கி பிடித்தபோது, காவல் துறையினரிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக ஆடுகள் திருடும் கும்பல் காவல் துறை சார் ஆய்வாளரை அறிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தது.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொலையாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைத்தனர்.

இதனையடுத்து,கொலை செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதனின் உடல் திருச்சி, திருவெறும்பூரில் 30 குண்டுகள் முழங்க, காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.இதனைத் தொடர்ந்து,இந்த சம்பவம் தொடர்பாக 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்பின்னர்,முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ,பூமிநாதன் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்ததோடு, அவரது குடும்பத்திற்கு பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் நிதி உதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியும் வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தார்.

இந்நிலையில்,கொலை செய்யப்பட்ட காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவிக்கான காசோலையை பூமிநாதன் அவர்களின் மனைவி கவிதாவிடம்  முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார்.சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வின்போது,டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்ட அதிகாரிகள் சிலர் உடன் இருந்தனர்.