தமிழகத்தில் இவைகளுக்கு அக்டோபர் 31ம் தேதி வரை தடை – முதல்வர் ஸ்டாலின் உத்தரவு..!

தமிழகத்தில் இவைகளுக்கு அக்டோபர் 31ம் தேதி வரை தடை – முதல்வர் ஸ்டாலின் உத்தரவு..!

தமிழகத்தில் திருவிழா,அரசியல் உள்ளிட்ட சில முக்கிய நிகழ்வுகளுக்கு அக்டோபர் 31ம் தேதி வரை தடை விதித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, நடைமுறையில் உள்ள கோவிட்-19 கட்டுப்பாடுகளை, 15.09.2021 காலை 6.00 மணி வரை நீட்டித்து ஏற்கெனவே அரசு ஆணையிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 27.5.2021 அன்று 36,000-க்கும் மேற்பட்ட அளவில் இருந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து தற்போது நாள் தோறும் சுமார் 1600 புதிய நோய்த் தொற்று கண்டறியப்படுகிறது. தமிழ்நாடு அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளாலும், நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகள் காரணமாகவும், நோய்த் தொற்று படிப்படியாக குறைந்துள்ளது. இருப்பினும் ஒரு சில மாவட்டங்களில் தினசரி எண்ணிக்கை சற்று உயர்ந்தும் காணப்படுகிறது.

மேலும், தற்போது அண்டை மாநிலமான கேரளாவில் நிஃபா வைரஸ் நோயின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் நிஃபா வைரஸ் நோயின் தாக்கம் ஏற்படாதவாறு, மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கேரளாவில் கொரோனா நோய்த் தொற்றின் தாக்கமும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அம்மாநிலத்துடனான பேருந்து போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் சிறப்பு அறிக்கை:

மேலும், மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் (MHA) கீழ் இயங்கும் தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சி நிறுவனத்தால் (NIDM) அமைக்கப்பட்ட சிறப்பு குழுவின் அறிக்கையில், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நாட்டில் கொரோனா நோய்த் தொற்றின் மூன்றாவது அலை வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளது என்றும், நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், தடுப்பு ஊசி போடுவது தொடர்ந்து ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழாக்களுக்கான தடை:

தமிழ்நாடு அரசு தொடர்ந்து எடுத்து வரும் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார நலனை கருத்தில் கொண்டு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், திருவிழாக்கள், அரசியல், சமுதாய மற்றும் கலாச்சார நிகழ்வுகளுக்கு தடைகள் தொடர்கின்றன. இது போன்ற நிகழ்வுகள் நோய் தொற்றை தீவிரமாக பரப்பக்கூடிய நிகழ்வுகளாக (Super Spreader Events) மாறக்கூடும்.

எனவே, கொரோனா நோய்த் தொற்றின் மூன்றாவது அலையின் தாக்கம் தமிழ்நாட்டில் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டும், அண்டை மாநிலமான கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா மட்டுமின்றி, நிஃபா வைரஸ் நோயின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டும், பொதுமக்கள் நலன் கருதி, அதிகப்படியான பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளான திருவிழாக்கள், அரசியல், சமூகம் சார்ந்த மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தற்போது உள்ள தடை அக்டோபர் மாதம் 31-ஆம் தேதி வரை தொடர்ந்து நீட்டிக்கப்படுகிறது.

 தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிகள்:

இந்திய திருநாட்டின் விடுதலைக்காக அரும்பாடுபட்ட தன்னிகரில்லாத் தலைவர்களையும் தமிழ்மொழி வளர்ச்சிக்காக அல்லும் பகலும் உழைத்த அறிஞர் பெருமக்களை புகழ்ந்திடவும், அவர்களது பிறந்தநாள் மற்றும் நினைவு நாள் நிகழ்ச்சிகள் அரசால் நடத்தப்பட்டு வருகிறது, தற்போதுள்ள கொரோனா நோய்த் தொற்று சூழலில், மேற்கண்ட தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிகளின்போது,மாலை அணிவிக்க மாவட்ட ஆட்சித் தலைவர் மட்டும் உரிய சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து அனுமதிக்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சிகளில் மரியாதை செய்யப்படும் தலைவர்களின் குடும்பத்தை சார்ந்தவர்களும் (5 நபர்களுக்கு மிகாமல்) பதிவு பெற்ற அரசியல் கட்சித் தலைவர்களும் (5 நபர்களுக்கு மிகாமல்) சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரிடம் முன் அனுமதி மற்றும் வாகனத்திற்கான அனுமதியைப் பெற்று, அரசு அறிவித்துள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி உரிய சமூக இடைவெளியை கடைபிடித்து மாலை அணிவித்து மரியாதை செய்ய அனுமதிக்கப்படுகிறது. மேலும், தமிழ்நாட்டில், ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

பொது:

செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து கடைகள் மற்றும் பொது மக்கள் கூடக்கூடிய இடங்களில் கீழ்க்கண்ட முக்கிய நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.

  • கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் (hand sanitizer with dispenser) கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும் (thermal screening).
  • கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.
  • அனைத்து கடைகளும், குளிர் சாதன வசதி இல்லாமல் செயல்படுவதோடு, கடைகளில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது.
  • கடைகளின் நுழைவு வாயிலில் பொது மக்கள் வரிசையில் காத்திருக்கும் போது, ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்.

மேலும், பொது போக்குவரத்தினை அவசியத்திற்காக மட்டுமே பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும்.பொதுமக்கள் பண்டிகைகளை தங்கள் இல்லங்களிலேயே கொண்டாட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

Join our channel google news Youtube