- முதல்வரை அசாதாரண சூழ்நிலைகளில் தவிர ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாரிகள் தொந்தரவு செய்யக்கூடாது என உத்தரவு பிறப்பிக்க வேண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
- மனுதாரருக்கு 10 ஆயிரம் அபராதமும் அடுத்த ஓராண்டுக்கு பொதுநல வழக்கு தாக்கல் செய்ய தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக பெருபான்மையுடன் ஆட்சியை பிடித்தது. அதே நேரத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை பரவக்கூடிய நேரத்தில் புதிய முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓய்வு இல்லாமல் பணியாற்றி வருவதாக கூறி சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் விவேகானந்தன் என்பவர் சென்னை நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்தார்.
அவர் தனது மனுவில் முதல்வரின் உடல் நலத்தில் அனைவருக்கும் அக்கறை உள்ளது. தொடர்ச்சியாக அவர் பல்வேறு ஆய்வுக் கூட்டங்கள், சுற்றுப் பயணம் என ஓய்வில்லாமல் உழைத்து வருவதாக கூறினார். இதேபோல ஓய்வில்லாமல் உழைத்த குஜராத் முதல்வர் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தனது மனுவில் சுட்டிகாட்டியிருந்தார்.
மேலும், முதல்வரை அசாதாரண சூழ்நிலைகளில் தவிர ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாரிகள் தொந்தரவு செய்யக்கூடாது என உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தெரிவித்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முதலமைச்சரும் அதிகாரிகள் எப்படி செயல்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
மேலும் மனுதாரருக்கு 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அந்த அபராதத் தொகையையும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என்றும் அடுத்த ஓராண்டுக்கு இவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்ய தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.