கொரோனா வார்டுக்குள் சென்றதற்கான காரணம் -முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கம்!

கொரோனா வார்டுக்குள் பிபிஇ கிட் அணிந்து சென்றதற்கான காரணம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.

இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்று அதிகமாக காணப்படும் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

திருப்பூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் கொரோனா நோயாளிகளுக்காக, திருப்பூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவ அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்த ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 மருத்துவ படுக்கைகள் மற்றும் 20 கார் ஆம்புலன்ஸ் பயன்பாட்டை தொடங்கி வைத்தார்.

பின்னர், முதல்வர் ஸ்டாலின் கோவை ஈ.எஸ்.ஐ.மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் பிபிஇ கிட் அணிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

இதனைத் தொடர்ந்து,முதல்வர் ஸ்டாலின் பிபிஇ கிட் உடையணிந்து கொரோனா வார்டுக்குள் சென்ற புகைப்படம் மற்றும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில்,கொரோனா வார்டுக்குள் பிபிஇ கிட் அணிந்து சென்றதற்கான காரணம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து,முதல்வர் ஸ்டாலின் கூறுகையில்,”வார்டுக்குள் செல்ல வேண்டாம் என்று அக்கறை மிகுந்த அறிவுரைகள் சொல்லப்பட்டாலும்,தம் உயிரையும் பணயம் வைத்துப் போராடும் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள்,அவர்தம் குடும்பத்தினருக்கு நம்பிக்கை ஊட்டவே உள்ளே சென்றேன்! இப்பெருந்தொற்றை நாம் வெல்வோம்”,என்று தெரிவித்துள்ளார்.