அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மறைவுக்கு முதல்வர் இரங்கல்..!

இ.மதுசூதனன் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்கும் துயரத்திற்கும் உள்ளானேன் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

அப்போலோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அதிமுக அவைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான இ.மதுசூதனன் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்கும் துயரத்திற்கும் உள்ளானேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுகவில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் அன்பைப் பெற்றவர். அவர்களால் கட்சியில் முக்கியப் பொறுப்பில் அமர்த்தப்பட்டவர்.

அதிமுகவின் அவைத் தலைவராகப் பணியாற்றிய அவர், அக்கட்சியின் வளர்ச்சிக்குப் பட்டிதொட்டிகள் வரை பாடுபட்டவர். அப்படிப்பட்ட முன்னோடித் தலைவரை அதிமுக இழந்திருப்பது பேரிழப்பாகும். ராதாகிருஷ்ணன் நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, கைத்தறித் துறை அமைச்சராகப் பணியாற்றியவர். சாதாரணத் தொண்டர் முதல் அக்கட்சியின் தலைவர்கள் வரை அனைவரிடமும் இனிமையாகப் பழகியவர்.

ஏழை – எளியவர்கள் மற்றும் அடித்தட்டு மக்களின் குரலாக அதிமுகவிற்குள் இறுதி மூச்சு வரை திகழ்ந்த மதுசூதனன் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அதிமுக தொண்டர்களுக்கும் எனது அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

author avatar
murugan