#BREAKING :ராஜஸ்தான் நம்பிக்கை வாக்கெடுப்பு : அசோக் கெலாட் அரசு வெற்றி

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட்  தலைமையிலான அரசு வெற்றி பெற்றுள்ளது.

ராஜஸ்தான் முதலமைச்சர்  அசோக் கெலாட்டிற்கு எதிராக போர்க்கொடி தூக்கி டெல்லியில் முகாமிட்டு இருந்த சச்சின் பைலட் மற்றும் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர் தனது முடிவை மாற்றி கொண்டு சச்சின் பைலட்  ஜெய்ப்பூருக்குத் திரும்பினர்.

ஜெய்ப்பூருக்குத் திரும்பிய பின்னர் சச்சின் பைலட்  முதல் முறையாக முதல்வர் அசோக் கெலாட்டை சந்தித்து பேசினார். இதற்கு இடையில் தான் இன்று ராஜஸ்தான் சட்டப்பேரவை கூட்டம்  நடைபெற்றது. ஆளும் காங்கிரஸ் தலைமையிலான முதலமைச்சர் அசோக் கெலாட் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சியான பாஜக முடிவு செய்தது .ஆனால்  ராஜஸ்தான் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று  அசோக் கெலாட் வலியுறுத்தினார். 

இந்நிலையில் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட்  தலைமையிலான அரசு வெற்றி பெற்றுள்ளது.ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நடைபெற்ற குரல் வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபித்தார் அசோக் கெலாட்.