சென்னை – சேலம் 8 வழிச்சாலை வழக்கு ! உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது – தினகரன்

சென்னை – சேலம் 8 வழிச்சாலைக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்கி நிலையில், உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது என்று தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை – சேலம் 8 வழிச்சாலைக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.அதாவது,சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் ஏற்கனவே விளைநிலங்களை கையகப்படுத்தியது செல்லாது என்று தீர்ப்பில் தெரிவித்தது.தற்போதைய அரசாணையின் மூலம் திட்டத்தை செயல்படுத்த மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் சுற்றுச்சூழல் விதிமுறைகளை பின்பற்றி மறு அரசாணை வெளியிட்டு திட்டத்தை தொடரலாம் என்றும் சுற்றுச்சூழல் விதிகளை கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் நீதிமன்றம் தெரிவித்தது.

இந்நிலையில் இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,சேலம் – சென்னை 8 வழிச்சாலை தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது. இந்தத் திட்டத்தை நிறைவேற்றியே தீருவேன் என்று ஒற்றைக்காலில் நிற்கும் முதலமைச்சர் பழனிசாமிக்கும்.சட்டப்பேரவையிலேயே ‘8 வழிச்சாலையை எதிர்க்கவில்லை’ என்று பேசிய எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் வேண்டுமானால் இத்தீர்ப்பு மகிழ்ச்சி தரலாம். ஆனால், மக்களின் உணர்வுகளுக்கும், கண்ணீருக்கும் நீதி கிடைக்காமல் போயிருப்பது வேதனை அளிக்கிறது.இத்தனைக்கும் பிறகு துளியாவது மனச்சாட்சி இருந்தால், 8 வழிச்சாலைத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு பழனிசாமி அரசு முனையக் கூடாது. மக்களின் உணர்வுகளைக் காலில் போட்டு மிதித்துவிட்டு 8 வழிச்சாலை போடுவதற்கு நினைத்தால் மக்கள் மன்றத்தில் அதற்குரிய தீர்ப்பு கிடைத்தே தீரும் என்று தெரிவித்துள்ளார்.