நடிகை மீரா மிதுனுக்கு ஜாமீன்…ஆனாலும்,வெளியில் வர முடியாது?…!

அவதூறு கருத்துக்களை பரப்பியதாக எம்.கே.பி நகர் போலீசார் பதிவு செய்திருந்த கொலை மிரட்டல் வழக்கில் நடிகை மீரா மிதுனுக்கு எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில் கேரளாவில் பதுங்கி இருந்த நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் அபிஷேக் ஆகியோரை கடந்த ஆக.14 ஆம் தேதி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

இதனையடுத்து,மீரா மிதுனுக்கு இரண்டு வாரம் நீதிமன்ற காவல் தண்டனை விதிக்கப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி விண்ணப்பித்த மீராவின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதற்கிடையில்,ஜோ மைக்கல் பிரவீன் என்பவர் தன்னைப் பற்றி சமூக வலைத்தளங்களில் மீரா மிதுன் அவதூறு கருத்துக்கள் கூறி வருவதாக  கடந்த 2020 ஆம் ஆண்டு  எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில் மீரா மிதுன் மீது கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 5 வழக்குகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர்.ஆனால்,அவர் ஆஜராகாத காரணத்தினால் மீரா மிதுனை நேற்று போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில்,சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று காலை மீரா மிதுனை போலீசார் ஆஜர் படுத்தினர். மேலும், 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.மேலும்,மீரா மிதுன் தரப்பில் இந்த வழக்கில் நிபந்தனை ஜாமீன் கோரி மனுதாக்க; செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம், எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் பதிவாகியிருந்த வழக்குகளில் இருந்து மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும், காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய போலீசாரின் மனுவையும் தள்ளுபடி செய்துள்ளது.

எனினும்,முன்னதாக வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்ட வழக்கில் மீரா மிதுனுக்கு ஜாமீன் கிடைக்காததால் அவர் தொடர்ந்து சிறையில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.