ஆதரவற்ற ஆஸ்திரேலிய மக்களுக்கு உதவும் இந்திய வம்சாவளி குடும்பம்…. குவியும் பாராட்டுகள்…

உலகின் தீவு கண்டமான ஆஸ்திரேலியா நாட்டின் மெல்போர்னில் கொரோனா நெருக்கடி காலத்தில் ஆதரவற்ற ஏழை எளிய மக்களுக்கு இந்திய வம்சாவளி சமையல் கலைஞரான ஸ்ரீவஸ்தவ் தினமும் இலவசமாக உணவு வினியோகித்து வருகிறார். இவரின் இந்த உதவி அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

தமான் ஸ்ரீவஸ்தவ் (54) என்பவர் வீடற்ற மற்றும் ஏழை மக்களுக்கு இலவச உணவை வழங்குவதற்காக ஆஸ்த்திரேலியாவில் அயராது உழைத்து வருகிறார், இதுகுறித்து ஸ்ரீவஸ்தவ் கூறுகையில், வீடற்ற மக்களுக்கு உணவு வழங்குவது ஒன்றும் எனக்கு புதிதல்ல. ஏற்கனவே ஈராக்கில் வளைகுடா போரின்போதும் இதே பணியை நான் செய்தேன். போரின்போது ஏற்பட்ட சூழலும் இப்போது ஏற்பட்டுள்ள சூழலும் எனக்கு ஒன்றுதான். தற்போதைய சூழலில் ஏராளமான மக்கள் வேலைகளை இழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோருக்கு வாழ்வாதாரம் பறிபோயுள்ளது. உணவு அனைவரின் உரிமை. நானும் வறுமையில் வாடியுள்ளேன்.

நான் துவக்கத்தில் ஆஸ்திரேலியாவுக்கு வந்த போது எனக்கும் தங்க வீடு இல்லை. அப்போது எனக்கு ஏற்பட்ட உணர்வு தான். என்னை இந்த பணியை செய்ய வைத்துள்ளது. தினமும் என் மனைவி மற்றும் மகளுடன் இணைந்து 150 உணவு பொட்டலங்களை தயார் செய்வேன். பின் ஆதரவற்றோருக்கு அவற்றை காரில் சென்று வினியோகிப்பேன். எனக்கு பலரிடம் இருந்து உதவிகள் குவிகின்றன. கடந்த நான்கு வாரங்களில் 6.8 லட்சம் ரூபாய் நிதி திரட்டியுள்ளேன். இந்த கொரோனா தொற்று காலம் முடிவுக்கு வந்தாலும் இந்த தொண்டு சேவையை தொடர்ந்து செய்வேன் என்று அவர் கூறினார்.

author avatar
Kaliraj