ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு? தலைமை தேர்தல் அதிகாரி பதில்!

காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் தேர்தலில் வெற்றி பெற்றால், ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளாக மாதவராவ் போட்டியிட்டார். 63 வயதாகும் அவர், காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதாக வேட்புமனுவை தாக்கல் செய்து, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடும்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

அதனைதொடர்ந்து அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை உயிரிழந்துள்ளார். மாதவராவின் மரணம், அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. அவரின் மரணத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் காங்கிரஸ் வேட்பாளர் உயிரிழந்ததை தொடர்ந்து, அத்தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் தேர்தலில் வெற்றி பெற்றால், ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.