#Breaking: பவுடர் வடிவில் கொரோனா தடுப்பு மருந்து- மத்திய அரசு ஒப்புதல்..!

கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை பவுடர் வடிவில் மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு கண்டுபிடித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையானது தீவிரமாகப் பரவி வருகிறது.இந்நிலையில்,கடந்த ஒரே நாளில் கொரோனா தினசரி பாதிப்பானது 4 லட்சத்தை எட்டியுள்ளது.மேலும்,கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,187 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால்,கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில்,கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை பவுடர் வடிவில் மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) கண்டுபிடித்துள்ளது.அதன்படி,பவுடர் வடிவிலான இந்த மருந்தினை தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.

டிஆர்டிஓ மற்றும் ஹைதராபாத்தின் டாக்டர் ரெட்டி ஆய்வகங்கள் இணைந்து உருவாக்கிய இந்த மருந்து “2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் (2-டிஜி)” என்று அழைக்கப்படுகிறது.இந்த மருந்தினை பயன்படுத்துவதற்கு அவசரகால அடிப்படையில் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் (டிசிஜிஐ) ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து,டிஆர்டிஓ இன்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் “2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் (2-டிஜி)” என்ற மருந்தானது கொரோனா நோயாளிகளை விரைவாக குணப்படுத்த உதவுகிறது மற்றும் ஆக்ஸிஜன் சார்ந்த நிலையை பெரும் அளவில் குறைக்கிறது என்பதை மருத்துவ சோதனை முடிவுகள் காட்டுகின்றன”,என்று தெரிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து,கடந்த 2020 மே முதல் அக்டோபர் வரை நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட சோதனைகளில்,கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்து பாதுகாப்பானது என்று கண்டறியப்பட்டது. மேலும், கொரோனாவிலிருந்து நோயாளிகளை விரைவாக குணப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டியுள்ளன.

வெற்றிகரமான இரண்டாம் கட்ட பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், டி.சி.ஜி.ஐ 3 ஆம் கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு மேலும் அனுமதியளித்தது.இந்த 3 ஆம் கட்ட பரிசோதனையானது டிசம்பர் 2020 முதல் நாடு முழுவதும் உள்ள 27 மருத்துவமனைகளில்,220 கொரோனா நோயாளிகளுக்கு நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த பவுடர் வடிவிலான “2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ்” மருந்து சந்தைக்கு வந்தால் கொரோனா நோயாளிகள் பெருமளவில் குணப்படுத்தப்படுவர் என்றும்,ரெம்டெசிவரை மட்டுமே நம்பியிருக்கும் சூழல் மாறும் என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.