இந்தியாவில் 300 முக்கிய நபர்களின் செல்போன் உரையாடல் ஒட்டுக்கேட்பு…! மத்திய அரசு விளக்கம்…!

இந்தியாவில் 300 முக்கிய நபர்களின் செல்போன் உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு விளக்கம். 

இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ என்ற நிறுவனத்தின் PEGASUS சாப்ட்வேர் மூலம் பல்வேறு நாடுகளில் முக்கிய நபர்களின் செல்போன் உரையாடல்கள், படங்கள், வீடியோக்கள் கண்காணிக்கப்பட்டதாக குற்றசாட்டுகள் எழுந்தது. இந்நிலையில், இதுகுறித்து, பிரான்ஸை சேர்ந்த Forbidden Stories என்ற ஊடக நிறுவனத்துடன் இந்தியாவைச் சேர்ந்த THE WIRE மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த வாஷிங்டன் போஸ்ட், தி கார்டியன் உள்ளிட்ட 17 ஊடக நிறுவனங்கள், அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆகியவை இணைந்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

அந்த ஆய்வில், இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்திடம் வேவு பார்ப்பதற்காக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செல்போன் எண்கள் இருந்தது  தெரியவந்துள்ளது. இவற்றில் பெரும்பாலானவை இந்தியா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மெக்ஸிகோ, பஹ்ரைன், ஹங்கேரி, மொராக்கோ, ருவாண்டா, அஜர்பைஜான், கஜகஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்தது என THE WIRE ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், இந்த பட்டியலில் இந்தியாவை சேர்ந்த 2 மத்திய அமைச்சர்கள், 3 எதிர்க்கட்சி தலைவர்கள், நீதிபதிகள், 40-க்கும் அதிகமான பத்திரிக்கையாளர்களது எண்களும் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி மற்றும் இந்தியாவை சேர்ந்த சமூக ஆர்வலர்களது எண்களும் இடம்பெற்றுள்ளன. மேலும், இந்த எண்கள் வேவுபார்க்கப்பட்டவையா? என்பது தொடர்பாக தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து விளக்கமளித்த இஸ்ரேல் நிறுவனம் பயங்கரவாதம் மற்றும் சட்டவிரோத செயல்களை தடுக்கும் நோக்கிலேயே தங்களது PEGASUS சாப்ட்வேர் தொழிநுட்பத்தை பல்வேறு, நாடுகளின் அரசுகளுக்கு வழங்கியிருப்பதாக விளக்கமளித்துள்ளது.

மேலும் இது தொடர்பாக விளக்கமளித்துள்ள மத்திய அரசு, கடந்த காலங்களிலும் இதுபோன்ற ஆதாரமற்ற குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்டதாகவும், தனிநபர் ரகசியம் என்பது அடிப்படை உரிமை என்பதால் அது காக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும், தற்போது எழுந்துள்ள குற்றசாட்டு அரசின் நிறுவனங்களை களங்கப்படுத்தும் நோக்கில் சுமத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.