ரமலான் பெருநாளில் சி.பி.எஸ்.இ தேர்வுகளா? தேதியை மாற்ற வேண்டும்! அமீர்கான் கோரிக்கை

சென்னை பிப்ரவரி 6: ரமலான் திருநாளில் சி.பி.எஸ்.இ தேர்வுகள் வருகிற சூழல் எழுந்திருப்பதை சுட்டிக் காட்டி தேர்வுத் தேதிகளை மாற்றுமாறு மத்திய கல்வித்துறை அமைச்சருக்கும், சி.பி.எஸ்.இ இயக்குனருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை ஆலோசகர் அ.அமீர்கான் கோரிக்கை விடுத்துள்ளார்.

சி.பி.எஸ்.இ க்கு அழகல்ல :

இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை ஆலோசகர் அ.அமீர்கான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,உலகம் முழுவதும் ரமலான் பெருநாள் இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டு தமிழக அரசும், மத்திய அரசும் மே மாதம் 14 ம் தேதி அன்று ரமலான் விடுமுறை அறிவித்துள்ளன. ஆனால் ரமலான் பெருநாள் பிறை தென்படுவதைப் பொறுத்து மாறும். ஆகவே ரமலான் திருநாள் தேதி ஒரு நாள் முன்னதாகவோ, பின்னதாகவோ மாறக் கூடிய வாய்ப்பு உள்ளது. இதை கணக்கெடுத்துக்கொள்ளாமல் சி.பி.எஸ். இ 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு தேர்வுகளை மே 13 மற்றும் மே 15 தேதிகளில் அறிவித்துள்ளது. மிகவும் வருந்ததக்கது.

ரமலான் தேதிகள் மாறுகிற பட்சத்தில் இஸ்லாமிய மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாவார்கள். மேலும், இஸ்லாமிய மாணவர்களை அவர்களுக்கு முக்கியமான பெருநாள் அன்று தேர்வு எழுத நிர்ப்பந்திப்பது சி.பி.எஸ்.இ க்கு அழகல்ல எனச் சுட்டிக் காட்ட கடமைப்பட்டுள்ளேன். கொரானா என்கிற கொடிய காலத்தில் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்க வேண்டிய நிலையில் அவசர கோலத்தில் தேர்தல் தேதியை அறிவித்துள்ளது ஏற்புடையதல்ல.ஆகவே, அத்தகைய நெருக்கடி வராமலிருக்க இப்போதே தேர்வுத் தேதிகளை மாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று  அமீர்கான் குறிப்பிட்டுள்ளார்.