“கேப்டன் விஜயகாந்த் நீடூழி வாழ வேண்டும்” – ஓபிஎஸ்,இபிஎஸ் வாழ்த்து..!

இன்று பிறந்தநாள் கொண்டாடும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் நீடூழி வாழ வேண்டும் என்று ஓபிஎஸ்,இபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள், இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் அவர் தனது பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடி வந்தார். தற்போது கொரோனா தொற்று காரணமாக  தனக்குப் பிறந்த நாள் வாழ்த்து கூற யாரும் நேரில் வர வேண்டாம் என்றும், தனது பிறந்தநாளை ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து கொண்டாடும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனையடுத்து,அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்,மற்ற கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்,தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு அதிமுக கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அதிமுக கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து:

“இன்று தனது 69-வது பிறந்த நாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் தேசிய முற்போக்கு திராவிடகழகத்தின் நிறுவனர் மற்றும் பொதுச் செயலாளர் “கேப்டன்” திரு.விஜயகாந்த் அவர்களுக்கு என்னுடைய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

‘வறுமை ஒழிப்பு என்பது மக்கள் இயக்கமாக மலர வேண்டும்’ என்ற குறிக்கோளை மனதில் ஏந்தி, ஏழை எளிய மக்களுக்காக பல்வேறு நலத் திட்ட உதவிகளை இன்றளவிலும் வழங்கிக் கொண்டிருக்கும் திரு. விஜயகாந்த் அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நூறு வயது கடந்து பல்லாண்டு வாழ இறைவன் அருள் புரியட்டும்.திரு. விஜயகாந்த் அவர்களின் நற்பணி தொடர எனது வாழ்த்துக்கள்”,என்று தெரிவித்துள்ளார்.

இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து:

“இன்று தனது 69வது பிறந்தநாள் காணும் தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர் மரியாதைக்குரிய கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களுக்கு என்னுடைய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள், இந்நாளில் அவர் உடல் ஆரோக்கியத்துடன், எல்லா வளமும் பெற்று இறைவன் அருளுடன், நீடூழி வாழ வாழ்த்துகிறேன”,என்று தெரிவித்துள்ளார்.